பக்கம் எண் :


226


நிறமும் பார்த்து; நீடாது இப் பேர் அஞர் உறுவி எவன் செய்தனள் என்று ஒரு நாள் கூறின்றும் இலர் - பாணித்தலின்றி இப் பெரிய துன்பம் உற்றவள் என்ன காரியம் செய்து கொண்டனளோ? என்று ஒரு நாளேனும் கூறினாரிலர்; எவ்வநோய் விரிநீர் வையக வரை அளவு இறந்த - யானடைந்த துன்ப நோயோ விரிந்த கடல் நீர் சூழ்ந்த நிலத்தின் எல்லையளவையும் கடந்தன; உயவுத் துணை பிறிது இன்று - இனி உசாவுந் துணை வேறியாதுமில்லை; இனி எவ்வண்ணம் உய்வேன்? எ - று.

     (வி - ம்.)வரி - நிறம். அஞர் - துன்பம். தண்ணுமை-எழுச்சிக்குரிய வாச்சியம். தோன்றியது - வினைவயிற் செல்லப் புறப்பட்டது. பொதுவினை - அறப்புறங்காவல், நாடுகாவல், பிறவுமாம், செம்மலை மூதூர்க்கு அடையாக்கி்க் காதலரைத் தோன்றா எழுவாயாக்கி யுரைப்பினு மமையும்.

     தனக்குத் தும்மல், புரையேறுதல் முதலாயின தோன்றாமையாலே தன்னை அவர் கருதிலெரன்றாள்; அன்புடையார் நினைந்தவழி அந் நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் முதலாயின தோன்றுமென்பது மகளிர் வழக்கு. வரினும் தன்னோய் தணித்தற்கியலாது தானிறந்துபடுவது திண்ணமெனக் கொண்டு எவ்வநோய் வையகவரை யளவிறந்ததென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) ஒருநாள் கூறின்றும் இலர் என்றது, அஞர் உறுவி எவன் செய்தனள் என அறிந்து வரும்படி ஒருநாள் ஒரு தூதனிடத்துக் கூறி விடுத்தாருமிலர் என்றவாறு. இதன்கண் மூதூர்த் தமது செய் வாழ்க்கையின் இனிய துண்டோ என்புழி செய் வாழ்க்கை என்றது அறஞ் செய்து வாழும் வாழ்க்கையை. இக்கருத்தோடு "தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால், அம்மா அரிவை முயக்கு" எனவரும் அருமைத் திருக்குறளையும் (1107) "மன்னவன் - புறந்தர வருவிருந்து ஓம்பித், தன்னகர் விழையக் கூடின், இன்னுறல் மார்ப அதுமனும் பொருள்" எனவரும் கலியையும் (பாலை- 8) நினைக.

     இனி, தோழி "நங்காதலர் நின்பாற் பெரிதும் விருப்பமுடையர்காண், ஆதலால் விரைந்து மீண்டும் வருகுவர்; அவர் வருந்துணையும் ஆற்றுக," என்று வற்புறுத்துதலின் அவள் கூற்றையே கொண்டு கூறி மறுப்பாள் 'எனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்' என்று எதிரழிந்து கூறினள் என்க. 'நீ தானும் ஒரு தூதுவிடுத்து அவர் நிலை அறிந்து கூறுவாயுமல்லை!' எனத் தோழியைக் குறிப்பாக வைவாள், 'உயவுத்துணை பிறிது இன்று' என்றாள்.

(130)
  
     திணை : நெய்தல்.

     துறை:இது, மணமனையிற் பிற்றைஞான்று புக்க தோழியைத் தலைவன் வேறுபடாமையாற்றுவித்தாய் பெரியை காண் என்றாற்குத் தோழி சொல்லியது.