(து - ம்.) என்பது, தலைவன் மணம்புரிந்து கொண்ட மறுநாள், அங்குச் சென்ற தோழியை அவன் 'இன்றளவும் தலைவி வருந்தி வேறுபடாமல் நன்றாகப் பாதுகாத்தனை, நீ பெரியையென்றலும், தோழி என்னைப் புகழ்வதினாலாய தொன்றுமில்லை; நீ மறவாதிருத்தற்பொருட்டு யாம் தொழிலும், பொழிலும், உயவுநெஞ்சமும், ஊடுதலுமுடையே மில்லை; ஆதலின் எங்களைக் கருதியிருந்த நீயே பெரியைகா'ணெனப் புகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, 'பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த, தெறற்கரு மரபின் சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
| ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் |
| உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு |
| ஊடலும் உடையமோ உயர்மணற் சேர்ப்ப |
| திரைமுதிர் அரைய தடந்தாள் தாழைச் |
5 | சுறவுமருப்பு அன்ன முள்தோடு ஒசிய |
| இறவார் இனக்குருகு இறைகொள இருக்கும் |
| நறவுமகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன் |
| கள்கமழ் பொறையாறு அன்னவென் |
| நற்றோள் நெகிழ மறத்தல் நுமக்கே. |
(சொ - ள்.) உயர் மணல் சேர்ப்ப - உயர்ந்த மணற் பரப்பினையுடைய நெய்தனிலத் தலைவனே!; திரை முதிர் அரைய தடந் தாள் தாழை சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய - திரைத்தல் முதிர்ந்த அரயையுடையவாய வளைந்த அடி மரத்தையுடைய தாழையினது சுறாமீன் கொம்பு போன்ற இருபுறமும் முள்ளையுடைய இலை முறிந்து சாயும்படி; இறவு ஆர் குருகு இனம் இறைகொள இருக்கும் - இறாமீனை இரையாகத் தின்ற நாரையின் கூட்டம் தங்குதல் கொள்ள வீற்றிருக்கும்; நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன் - கள்ளுணவையுண்டலான் மகிழ்ந்திருத்தலையுடைய நல்ல தேரையுடைய பெரிய னென்பானது; கள் கமழ் பொறையாறு அன்ன என் நல்தோள் - கள்ளின் மணங் கமழும் 'பொறையாறு' என்னும் ஊர் போன்ற என்னுடைய நல்ல தோள்கள்; நெகிழ மறத்தல் நுமக்கு - நெகிழும்படி நீயிர் எம்மை மறப்பதற்கு யாம் நும்மையின்றி; ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ - வேறு விளையாட்டு அயர்தற்குத் தொழிலையும் நும்மையின்றி வேறு பிரிந்து சென்று தங்கி இருப்பதற்குச் சோலையையும் நும்மை நினைக்கலாகாத வருந்துகின்ற நெஞ்சினையும் நும்பால் ஊடுதலையுமுடையமோ?; அங்ஙனமாயின் நீயிர் மறந்திருப்பீர், இல்லையே; ஆதலின் நீயிர்