பக்கம் எண் :


271


மழை வந் திருண்டதுகாண்; யாம் நாளைமுதலாகத் தினைப்புனங்காவலுக்குச் செல்லுகிற்பேம்; அதனால் நமது துன்பந்தீர ஆண்டுப் பகற்பொழுது வருவாயாகவென இரவுக்குறிமறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"(தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
நீயே, அடியறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்தெம் 
    
கடியுடை வியனகர்க் காவல் நீவியும் 
    
பேரன் பினையே பெருங்கல் நாட 
    
யாமே, நின்னுநின் மலையும் பாடிப் பன்னாள் 
5
சிறுதினை காக்குவஞ் சேறும் அதனால் 
    
பகல்வந் தீமோ பல்படர் அகல 
    
எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி 
    
அரியல் ஆர்ந்தவ ராயினும் பெரியர் 
    
பாடிமிழ் விடர்முகை முழங்க 
10
ஆடுமழை இறுத்ததெங் கோடுயர் குன்றே. 

    (சொ - ள்.) பெருங்கல் நாட நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து - பெரிய மலை நாடனே! நீ தானும் இரவில் வருநெறி தவறின் அந் நெறியை மெல்ல அடி வைத்து அறிந்து ஒதுங்கிச் செல்லுதற்குங் கூடாத நிரம்பிய இருட்பொழுதினில் வந்து; கடி உடை எம் வியன் நகர்க் காவல்நீவியும் - காவலையுடைய எமது அகன்ற மாளிகையின் உள்ளின்கண்ணதாகிய காவலையுங் கடந்து வந்து கூடி; பேரன்பினையே - பெரிய அன்பினையுடையையாயிராநின்றனை; எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி அரியல் ஆர்ந்தனர் ஆயினும் பெரியர் - கொறுக்கச்சி முளைத்தடர்ந்த பெரிய மலைப்பக்கத்துள்ள சிறுகுடியின்கண் எமர் கள்ளை மிகுதியாகவே பருகி மயங்கினவராயினும் அவர் தாம் வெகுளியில் மிகப் பெரியவராயிராநின்றார்; ஆடு மழை பாடு இமிழ் விடர் முகை முழங்க எம் கோடு உயர் குன்றம் இறுத்தது - அன்றியும் இயங்குகின்ற மேகம் தான் முழங்குகின்ற இடியினொலி பிளவுபட்ட மலைமுழையின்கண்ணும் எதிரொலி முழங்கும்படி எமது கொடுமுடியுயர்ந்த குன்றின்கண்ணே வந்து தங்கியிராநின்றது; இரவின் கண்ணே முயங்கி நலனுகருமாறு கருதி வாராதே கொள்!, யாம் நின்னும் நின்மலையும் பாடி பல்நாள் சிறுதினை காக்குவம் சேறும் - மற்றும் யாம் நின்னையும் நின்மலையையும் பாடிப் பற்பல நாளளவும் சிறிய தினைப்புனத்தைக் காக்கும் பொருட்டு நாளையே செல்லாநிற்பேம்; அதனால் பல்படர் அகல பகல்வந்தீம் - அதனால்