பக்கம் எண் :


289


பயனை அடைந்தேன் ஆகின்றேன்; அதன்தலைப் பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்-அதன்மேலும் பொன்னாலாகிய தொடியணிந்த புதல்வனும் விளையாட்டயர்தல் கற்றிருக்கின்றனன்; வேறு புலத்து வினையும் இலன் - நுங்களைக் கண்டு மகிழ்வதினுங் காட்டிற் சிறந்ததொன்றும் இல்லாமையால் வேற்றிடஞ் சென்று செய்யும் செயல் யாதுமில்லாதேனாகியிராநின்றேன்; காதல் தானும் கடலினும் பெரிது - நின்பால் எனக்குண்டாகிய ஆசையோ கடலினும் பெரிதாயிராநின்றது; நினையின் யாதனின் பிரிவாம்-இவற்றை ஆராயின் எக்காரணத்தை முன்னிட்டு நாம் ஒருவரையொருவர் பிரிகிற்பம்; பிரியகில்லமாதலின் நீ வேறுபட்டுக் காட்டி என்னை வருத்தாதே கொள்!; எ - று.

    (வி - ம்.)யாழ : முன்னிலையசை. மாதர் - காதலுமாம். ஓரனையேன் - ஒரு தன்மையேன். முதல் இவ்விரண்டடிகளிரண்டும் நிரனிறையணி. யானும் என்றதன் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை, நீ என்பால் வைத்திருக்குங் காதலேயன்றி யெனப் பொருள்படுதலின்; அது வேறுபட்டுக் காட்டலால், நீ வேறுபட்டென்பது முதற் சொல் எச்சம். மெய்ப்பாடு - மருட்கை. பயன் - தலைவியை ஆற்றுவித்தல். கைகோள் - கற்பு. பிரிவறிந்து வருந்துழித் தேற்றலிற் பாலையாயிற்று.

    (பெரு - ரை.) அறம் நிலைபெற்றோர் என்றது, தம்மில் இருந்து தமது பாத்துண்பாரை, அதனினும் சிறந்த இன்பம் இவ்வுலகினின்மையின் அதனை உவமை யாக்கினான்.

    இனி, இச்செய்யுட்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல் அரிது; தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம்.

(166)
  
167. . . . . . . . . . . . . .
திணை : நெய்தல்.

துறை : (1) இது, தோழி பாணர்க்கு வாயின்மறுத்தது.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் தன்பால் மனைவி ஊடியதறிந்து ஊடல் நீங்குமாறு தேற்றவேண்டிப் பாணனை விடுப்ப வந்தானை நோக்கித் தோழி, 'பாண! நீ கூறும் பொய்மொழிகள் நலனிழந்த தலைவியினது நுதலினெழுந்த பசலையை நீக்க வல்லன அல்லகண்டாயாதலின், மீண்டு செல்வாயாக'வென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் குறைவினை எதிரும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

துறை : (2) தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉமாம்.

    (து - ம்.) என்பது, வினைவயிற்சென்ற தலைமகன் தன் வருகையை முன்னரே தெரிவிக்குமாறு தூதாகவிடுத்த பாணனைத், தோழி 'தலைவர் வந்து தலையளி செய்தாலன்றி நீ கூறும் இனியமொழி நலனிழந்த தலைவியினது