பக்கம் எண் :


292


    
சுரும்புண விரிந்த கருங்கால் வேங்கைப் 
    
பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல் 
    
புள்ளுற்றுக் கசிந்த தீந்தேன் கல்லளைக்  
    
குறக்குறு மாக்கள் உண்ட மிச்சிலைப்  
5
புன்தலை மந்தி வன்பறழ் நக்கும் 
    
நன்மலை நாட பண்பெனப் படுமோ 
    
நின்நயந் துறைவி இன்னுயிர் உள்ளாய் 
    
அணங்குடை அரவின் ஆரிருள் நடுநாள் 
    
மைபடு சிறுநெறி எஃகுதுணை ஆக 
10
ஆரங் கமழும் மார்பினை 
    
சாரல் சிறுகுடி ஈங்குநீ வரலே. 

    (சொ - ள்.) சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல் - வண்டுகள் உண்ணுமாறு மலர் விரிந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையிலே; புள் உற்று கசிந்த கல் அளைத் தீம் தேன் - தேனீக்கள் மொய்த்தலாலே கசிந்து கல்லின் குழிகளில் வடிந்த இனிய தேன்; குறக் குறு மாக்கள் உண்ட மிச்சிலை - குறவரின் இளமகாஅர் வழித்துண்டெஞ்சியதை; புல் தலை மந்தி வல் பறழ் நக்கும் நல் மலை நாட - மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனே!; நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் - நின்னை விரும்பியுறையும் இவளது இனிய உயிர் படுகின்ற துன்பமின்னதென்று கருதாமல்; அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடு நாள் மைபடு சிறுநெறி - வருத்துந் தன்மையுடைய பாம்புகள் இயங்குகின்ற வருதற்கரிய இரவின் நடுயாமத்தில் மயக்கந்தருகின்ற சிறிய வழியின் கண்ணே; எஃகு துணை ஆக ஆரம் கமழும் மார்பினை - நின் கையிலேந்திய வேற்படையையே நினக்குரிய துணையாகக் கொண்டு சந்தனம் பூசுதலால் அதன் நறிய மணங்கமழ்கின்ற மார்பினையுடையையாய்; சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரல் பண்பு எனப்படுமோ - சாரலின்கணுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்து நீ தனியே வருதல் தகுதிப்பாடுடையதாமோ? ஆதலின் இனி இங்கு இரவில் வரற்பாலை அல்லைமன்! எ - று.

    (வி - ம்.)நீ தனியே வருநெறி கருதிய தலைவி இறந்துபடுமென்பாள் உயிருள்ளாய் என்றாள். நறுநாற்றங்கண்டு அணங்குகள் அணங்கு மென்பதனைக் குறிப்பிப்பாளாய் ஆரங்கமழு மார்பினையென்றாள். அணங்குடை அரவு நெறியென வருநெறி ஏதத்துக் கஞ்சுவது கூறினாள். இவற்றால் நீ வரற்பாலையல்லை மன்னென எதிர்மறை ஏகாரங்கொடுத்து