(து - ம்.) என்பது, தலைவன் பிரிதலானே தலைவி வருந்துவளென நினைந்து மெலிந்த தோழியை அதனையறிந்த தலைமகள் கூறுவாளாய் நம் காதலர் தாஞ்சென்ற ஆறு மரமீதேற இயலாத ஓந்தி யாழோசை யோர்ந்து அசைவு தீர்ந்து ஏறுந்தொழிலையுடையவாகுமென்று உரை செய்வராதலின், அன்னதொரு நெறியில் யாங்ஙனம் செல்வரோவென்று என்னுள்ளம் வருந்துவதாயினும் அவர் வருவரென ஆற்றுவேன் காணென்று இறைச்சியாலே பொருள் கொள்ளுமாறு சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""கொடுமை யொழுக்கம்.............................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்"" (தொல். கற். 6) என்னும் விதியான் அமைத்துக்கொள்க.
| கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி |
| இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு |
| பெருங்கை யானை பிடியெதி ரோடும் |
| கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை |
5 | வேனில் ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் |
| பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர் |
| நெடுநிலை யாஅம் ஏறுந் தொழில |
| பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு |
| காமர் பொருட்பிணி போகிய |
10 | நாமவெம் காதலர் சென்ற வாறே. |
(சொ - ள்.) கல் ஊற்று ஈண்டல நீர் இரும்பிணர்த் தடக்கை நீட்டி - கல்லின்கண்ணே ஊறுகின்ற ஊற்றிற் சேர்தலையுடைய நீரைப் பெரிய சருச்சரையுடைய நீண்ட துதிக்கையை நீட்டி; கயன் அற வாங்கி நொண்டு - அவ் வூற்றுக் குழியில் அற வாங்கி முகந்து கொண்டு; பெருங்கை யானை பிடி எதிர்ஓடும் - பெரிய கையையுடைய களிற்றியானை தன் பிடியானையினெதிரே ஓடாநிற்கும்; கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை - காடு முற்றும் வெப்பமடைந்த வறன் மிக்க கற்சுரத்திலே; பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு - தன் வாழ்நாளும் பொருளும் இன்னோரன்ன எல்லாம் பிறர் பொருட்டேயென்று முயன்று முடிக்கும் பெரிய அருள் மிக்க நெஞ்சுடனே; காமர் பொருட்பிணி போகிய - அழகிய பொருளாசை பிணித்தலால்;