எம் காதலர் சென்ற நாம ஆறு - எம் காதலர் சென்ற அச்சமுடைய நெறி; வேனில் நிறம் பெயர் முது ஓதி போத்து - வேனிலின்கண் மாறி மாறித் தன்னிறம் வேறுபடுகின்ற முதிய ஓந்திப்போத்துத்தான்; பாண் யாழ் கடைய வாங்கி - ஏற இயலாது வருந்தியவிடத்து ஆண்டுச் செல்லும் பாணர் தம் அசைவு தீரச் சிறிது பொழுது யாழ் வாசிப்ப அதனைக் கேட்டலும் தன் வருத்தந்தீர்ந்து; பாங்கர் நெடுநிலை யாஅம் ஏறும் தொழில் - பக்கத்தில் நீண்டு நிற்றலையுடைய யாமரத்தின் மீது ஏறுந்தொழிலையுடையனவென்பர்; அத்தகைய கொடிய காட்டில் அவர் செல்லுவதனை நினைத்தலான் இனி எவ்வண்ணம் யான் ஆற்றியுளேனாவேன்? எ - று.
(வி - ம்.)கயன் - ஊற்றுநிலை. பிணர் - சருச்சரை. ஈண்டல -ஈண்டுதலையுடைய நீர். ஓதி - ஓந்திக்கொரு பெயர். நிறம்பெயர். முதுபோத்தென்றதனாலே பச்சோந்தியெனவுமாம். கடைய - செலுத்துதலால். பொருட்பிணிகாதலரெனக் கூட்டுக. அத்தகைய என்பது முதற் குறிப்பெச்சம். இங்ஙனம் கூறினாள் இறைச்சியால் ஆற்றியிருப்பேனாதலின் நீ வருந்தாதேகொள் என்றாளென்பது.
இறைச்சி :- நீர்வறந்த காலத்துக் கயத்திலூறு நீரைத் தன்பிடி வருந்தாவாறு களிறு கையால் நொண்டுகொண்டு சென்றதென்றதனாலே யான் வருந்தாவாறு தலைவர்தாம் சென்றவிடத்து எய்தப்படும் பொருளொடு விரைந்து போதருவர் ஆதலின் ஆற்றியிருப்பேனென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) "நம்பெருமான் இல்லறம் இனிது நடத்தற் பொருட்டே நம்மைப் பிரிந்தனர் ஆதலின் அவர் வருங்காறும் யானும் ஆற்றியிருத்தலாகிய என் கடமையை மேற்கொள்ளுவல் வருந்தாதே கொள்" என்பது குறிப்பெச்சமாகக் கொள்க. பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு பொருளீட்டச்சென்ற காதலர் கருத்திற்கு இயைய ஒழுகுதல் என் கடமையன்றோ என்பது கருத்து.
(186)
திணை : நெய்தல்.
துறை : இது, தலைமகன் பகற்குறிவந்து மீள்வானது செலவு நோக்கித் தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது
(து - ம்.) என்பது, பகற்குறிவந்த தலைமகன் மீண்டு போகும் பொழுது அவன் செல்லுதலை நோக்கிய தலைவி புலம்புகின்றவள், "கானற்சோலையும் விளங்குதல் குறைவதாயிற்று; காதலன் ஏறிச் செல்லுந் தேருஞ் சென்று மறையாநிற்கும்; ஆதலின் இவ்வூரொடு, நாம் அவனை முயங்கியிருந்த சோலை இனி நமக்கு எவ்வண்ணமாகத் தோன்றாநிற்கு"மென அழிந்து கூறாநிற்பது.