பக்கம் எண் :


332


நேற்றே தேரொன்று வந்ததென்று அலரெழுந்ததனாலே இனி நினது தேர் இங்குக் களவொழுக்கத்து வாரற்க என்றாளாயிற்று. கொய்யேனாயினெனத் தலைவியை இற்செறித்தமை அறிவுறுத்தினாள். இது தலைவியைத் தானாகக்கொண்டு கூறியது. வறுந்தேர்போதல் அரிதென்றதனாலே வரைந்து தேரேற்றிச் செல்கவெனவும் அன்றேல் வலிந்து கொண்டுதலைக்கழிக வெனவுங் குறிப்பித்தாளென்பது.

     உள்ளுறை :- ஞாழலி னொள்ளிய பூங்கொத்து மகளிரிழைத்த வண்டற்பாவையின் மார்பிலே தேமல்போலப் பரக்குமென்றது, அன்னையின் சீற்றம் என்னாற் காவற்பட்ட தலைவியின்மீது ஒறுப்பதுபோலத் தாக்காநிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம்: பயன் - செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) அத்தேர் வருதற்குக் காரணம் யாதென வினவுவாள் போன்று அன்னை என்னை நோக்கினள் என்பது எச்சமாம். எனவே அன்னை நங்களவொழுக்கினை அறிந்துகொண்டாள் என்றுணர்த்தினாளாயிற்று. நாளை மணிப்பூமுண்டகம் கொய்யேன் என்றது தலைவி இற்செறிக்கப்படுதல் ஒருதலை என்றவாறாம். அணிக்கவின் உண்மை அரிது என்றது இந்நிகழ்ச்சியினால் தலைவி பெரிதும் நலனழிந்து வருந்துவள் என்றவாறு. எல்லி - பகலுமாம்.

(191)
  
     திணை :குறிஞ்சி.

     துறை :இஃது இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வந்துகூடுந் தலைவனை நோக்கித் தலைவி அவன் இராவருநெறியின் ஏதம்நினைந்து கவன்று இனி நீ இங்ஙனம் வாராதேகொள் என்றாளை, நீ யஞ்சாதொழி, நினது நலனை யான் கருதி வரும்பொழுது நின் மேனியொளியே யாண்டும் வீசி இருளைப் போக்குவதாகத் தோன்றுதலானே, இம் மலையடியிலுள்ள நெறி எனக்கொரு காவலாகியே யிருக்குமெனத் தேற்றிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, ""பண்பிற் பெயர்ப்பினும்"" என்னும் நூற்பாவின்கண் ""ஆற்றிடை யுறுதலும்"" எனவரும் (தொல். கள. 12) விதி கொள்க.

    
குருதி வேட்கை உருகெழு வயமான் 
    
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் 
    
மரம்பயல் சோலை மலியப் பூழியர் 
    
உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் 
5
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை 
    
நீநயந்து வருதல் எவனெனப் பலபுலந்து 
    
அழுதனை உறையும் அம்மா அரிவை