| மந்தியு மறியா மரம்பயில் ஒருசிறைக் |
| குன்ற வெற்பனொடு நாம்விளை யாட |
| விரும்புகவர் கொண்ட ஏனற் |
10 | பெருங்குரல் கொள்ளாச் சிறுபசுங் கிளிக்கே. |
(சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழீ! வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; கல் மிசைத் தனிநிலை இதணம் புலம்பப் போகி - மலைமேலே சமைத்த தனியாக நிலைபெற்ற கட்டுப் பரண் வறிதாம்படி விடுத்துச் சென்று; மந்தியும் அறியா மரம் பயில் ஒருசிறை - மரமேறுந் தொழிலிலே சிறப்புடைய மந்திகளும் ஒன்றோடொன்று செறிந்திருப்பதால் ஏறியறியாத மரங்கள் நெருங்கிய ஓரிடத்திலே; குன்ற வெற்பனொடு நாம் விளையாட - குன்றுகளையுடைய மலைகிழவனுடன் நாம் முயங்கி விளையாட்டயராநிற்கவும்; (விரும்பு கவர் கொண்ட ஏனல் பெருங்குரல் கொள்ளா) - அப்பொழுது மிக விருப்பங்கொண்ட புனத்திலுள்ள தினையின பெரிய கதிர்களைத் தின்றழித்துவிடாத; கய வாய்க் கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் வலன் உயர் மருப்பின் நிலன் ஈர்த் தடக்கை அண்ணல் யானைக்கு - பெரிய வாயையுடைய கன்றினை, மருங்கிலுடைய பிடியானையோடு புணர்ந்து இயங்குகின்ற வலிமை மிக்க மருப்பினையும் நிலத்தின் கண் ஈர்த்தலையுடைய நெடிய துதிக்கையையும் பெருமையையுமுடைய களிற்றியானைக்கு; நாம் யாது கைம்மாறு செய்வாம் - நாம் யாது கைம்மாறு செய்யக்கடவாநிற்போம்?; அன்றியும் விரும்புகவர் கொண்ட ஏனல் பெருங்குரல் கொள்ளாச் சிறுபசுங்கிளிக்கே - அன்றியும் மிக விருப்பங்கொண்ட பெரிய தினைக் கதிரைக்கொண்டு போகாதொழிந்த சிறிய பசிய கிள்ளைக்கு; (நாம் யாது கைம்மாறு செய்வாம்) - யாது கைம்மாறு செய்யக் கடவா நிற்போம்; இப்பொழுது நம்மை இல்வயின் செறித்தலானே அவை புனம் புகுந்து அழிக்கலாயின; எ - று.
(வி - ம்.) விரும்புகவர்: ஒரு பொருட்பன்மொழி; விரும்புகின்ற விருப்பமுமாம். வலன்-வலிவை. கொள்ளாயானையெனவும் கொள்ளாக் கிளியெனவுங் கூட்டுக. இப்பொழுதென்பது முதற் குறிப்பெச்சம்.
காவலொழிந்து சென்று அவனொடு நாம் விளையாட்டயர்ந்ததனையும் மறந்து வரையாதொழிந்தனனே யென்றிரங்கியதாம். இப்பொழுது அழிப்பனபோல நாம் காக்குநாளில் அழிவுசெய்திருந்தால் அன்னையும் ஐயன்மாருங் கொள்ளுஞ்சினம் இன்னும் கொடியதாகுமென்பது.
இறைச்சி:- கன்றை மருங்கிலுடைய பிடியைக் களிறுபுணர்த்தியலுமென்றது, மணம்புரிந்து இல்லறமேற்கொண்டு புதல்வனைப் பயந்து அப்புதல்வன் மருங்காகத் தலைவன் என்னை இடையறவுபடாது முயங்கி இயங்குவானாகவென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல்.