புள்ளின் கானலம் தொண்டி - கல்லென ஒலிக்கின்ற புள்ளினங்களையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த தொண்டியின் கண்ணதாகிய வயலிலே; நெல் அரி தொழுவர் கூர்வாள் உற்று என - நெற்கதிர் அறுக்கும் உழவரினுடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனாலே; பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் - பல இதழ்கள் விளங்கிய குவியாத நெய்தன் மலர்; நீர் அலை தோற்றம் போல - நீரில் முங்கி அலைகின்ற தோற்றத்தைப்போல; நீ நயந்தோள் கண் ஈரிய கலுழும் - நீ விரும்பிய காதலியின் கண்கள் ஈரியவாய்க் கலுழாநிற்கும் ; யான் கண்டிசின் - அதனை யான் கண்டிருக்கின்றேன்; ஆதலின் நீயும் அவள் கலுழாதிருக்குமாறு வரைந்தருள செய்கின்றாயில்லை; அருளாய் ஆகல் ஓ கொடியது - இங்ஙனம் அருளாதிருப்பது ஓஒ கொடிதுகாண்! எ - று.
(வி - ம்.) ஆகல்: பிரிவிலசைநிலை. குருளை-இளங்குட்டி, தில்லை - உப்பு நீரருகே வளர்வதொரு மரம். இதனடிப்பொந்து தண்ணீரிலே தோயப் பெற்றிருப்பதால் பொதும்பிலே பள்ளி கொள்ளுவதியல்பு.
நின்னைக் கண்டவழி யுவத்தலின் அவள் அழுவதனை நீ யறிந்தாயல்லை; யான் கண்டுளேனென்றாள். இது, துன்பத்துப்புலம்பல்.
உள்ளுறை :- நீர்நாய்க்குருளை தன் விருப்பத்தின்படி மீனைத் தின்று கவற்சியின்றிப் பொந்துகளிலே பள்ளிகொள்ளுதல்போல, நீதானும் இரவெல்லாம் இவளது நலனுகர்ந்து மணம்புரியுங் கவலையென்பதின்றி நின்னூர்வயின் சென்று வைகுகின்றனை யென்றதாம்.
இறைச்சி :- தொண்டியின்கணுள்ள கானலிலே புள்ளினம் கல்லென ஒலிக்குமென்றது, ஊராரெடுத்த, பழிச்சொல் கல்லென ஒலியா நிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) ஊரவர் பழிச்சொல் நெஞ்சத்தே புண்செய்தலால் இவள் கண் கலுழும் என்பது தோன்ற நெல்லரி தொழுவர் கூர்வாள் உற்று அரியுண்ட நெய்தலை உவமை எடுத்தாள், அவள் கண்கள் உறங்கில என்பாள் கூம்பா நெய்தல் என்றாள்.
(195)
திணை : நெய்தல்.
துறை : இது, நெட்டிடைகழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேல் இட்டுத் தன்னுள்ளே சொல்லியது.
(து - ம்.) என்பது, அறத்தொடுநின்று வெளிப்பட்டபின்னும் தலைமகன் வரைந்து கொள்ளாது பொருள்வேண்டி நெடுந்தூரஞ் சென்றுறைதலானே ஆற்றாத தலைமகள், திங்களைநோக்கி நீ அறியாவிடமில்லையாதலின் என் காதலர் உறையுமிடம் நினக்குத் தெரிந்திருந்தும் எனக்குக் கூறினாயல்லை, இங்ஙனம் அறிந்திருந்தும் பொய்த்தலின் நின்புலனழிந்து அது சொல்ல இயலாதவாறு ஆவாயெனக் கடிந்து கூறாநிற்பது.