சேர்ந்த மெல்லிய தழையை யுடுத்து நுந்தந்தையினுடைய கிளி கடி கருவியாலே பாதுகாக்கப்படுகின்ற அகன்ற தினைப்புனத்தின் கண்ணே பொழுது போதலும் வருவேனோ?; குறும் சுனைக்குவளை அடைச்சி நாம் புணரிய நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ - பறித்த சுனைக்குவளை மலரைச் சூடி நாம் பண்டு புணர்ந்த நறிய தண்ணிய மலைப்பக்கத்தில் விளையாடுவோமாதலால் அதற்கு அங்கு வருவேனோ?; இன் சொல் மேவு அலைப்பட்ட என் நெஞ்சு உண இனிக் கூறு - இவற்றுக்கு விடையாக நின் இனிய மொழியை விரும்புதலால் அம்மொழி பெறாமல் வருந்துகின்ற என்னுள்ளங்கொண்டு மகிழும்படி இப்பொழுது ஒருமொழி கூறிக்காண்!; நின் கூர் எயிறு உண்கு என - நின்னுடைய கூரிய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன் என; யான் தன் மொழிதலின் - யான் நெருங்கி அவள்பால் இனிய வார்த்தை பலவற்றைக் கூறலின்; மொழி எதிர் வந்து தான் செய் குறியில் இனிய கூறி - என் சொல்லுக்கு எதிராக வந்து தான் முன்பு செய்த குறியிடத்து அழைத்துக் கொண்டுபோய் "நீ பின்னர் என்னை முயங்குதி" என இனிய மொழிகளைக் கூறி; ஏறு பிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்டு உறு கழை நிவப்பின் சிறு குடிப் பெயரும் கொடிச்சி - கலைமானைப் பிரிந்து அகல்கின்ற பெண்மானைப்போல் நின்னை வேறாகக் கொண்டு மிக்க மூங்கில் உயர்ந்து தோன்றுதலையுடைய தன் சிறுகுடியின் கண்ணே பெயர்ந்து செல்லும் கொடிச்சி; செல் புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் - செல்லுகின்ற பின்புறம் நோக்கி அவளைக் கைவிட்டு ஏமார்ந்திருந்த நெஞ்சமே!; விடல் ஒல்லாது - ஒருத்தி நின் கையிலகப்பட்டால் அவளது நலனை நுகர்ந்து மகிழாது கைவிடலாமா, விடலாகாதே! எ - று.
(வி - ம்.) எயிறு உண்கு - வாயை முத்தமிடுவேனெனவுமாம். மேவு அலைப்பட்ட - விருப்பம் அலைத்தலால் துன்பப்பட்ட.
தழைதைஇ எற்பட வருகோவென்றது, வேற்றோனென ஐயுறாதபடி குறிஞ்சி நிலத்துக்குரிய தழையை உடையாகப் புனைந்து இரவுக் குறிவரலாமோ என்றானென்பது. சாரலாடுகம் வருகோவென்றது, பகற்குறி வரலாமோவென வினவினானென்பது. தன்மொழிதல் - அவளுள்ளம் அவன்பால் விரும்புமாறு கூறிய பலவகையாய நயமொழிகள்.
மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரல். பயன் - கேட்ட தோழி குறைமுடிப்பாளாவது.
(பெரு - ரை.) இதனால் தலைவன் தனக்கும் தலைவிக்கும் இடந்தலைப்பாடுண்மையை தோழிக்குக் குறிப்பானுணர்த்தின்மை யுணர்க.
எற்பட என்பதற்குக் கதிரவன் தோன்றிய விடியற் காலத்தே எனப் பொருள் கூறலே தகுதியாம். நெஞ்சம் : விளி.
(204)