பக்கம் எண் :


370


    
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் 
    
அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்மென 
    
வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை 
    
அரும்பவிழ் அலரிச் சுரும்புண் பல்போது 
5
அணிய வருதுநின் மணியிருங் கதுப்பென 
    
எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி 
    
மைசூழ் வெற்பின் மலைபல இறந்து 
    
செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் 
    
கேளார் கொல்லோ தோழி தோள் 
10
இலங்குவளை நெகிழ்த்த கலங்கஞர் எள்ளி 
    
நகுவது போல மின்னி 
    
ஆர்ப்பது போலும்இக் கார்ப்பெயல் குரலே. 

     (சொ - ள்.) தோழி இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இனம் என - தோழீ! இம்மைக்குரிய புகழும் இருமைக்குமுரிய இன்பமும் அங்ஙனம் மறுமையிலும் இன்புறுதற்கேதுவாகிய இரந்தோர்க்கீதல் முதலாகிய கொடைமையும் ஆகிய இம்மூன்றும் தமது இல்லின்கண்ணே செயலற்றிருந்தோர்க்கு அருமையாகவும் கைகூடுவதில்லை எனக் கருதி; வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை - பொருள் செயல் வினையிடத்துப் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டுடனே; நின் மணி இருங் கதுப்பு அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது அணிய வருதும் என நெஞ்சு உண - என்னை நோக்கி "நின்னுடைய நீலமணிபோலுங் கரிய கூந்தலுக்குக் கார்காலத்து அரும்பு மலர்ந்த இதழ்களில் வண்டுகள் தேனைப் பருகாநின்ற பலவாய மலர்களை அணியும் பொருட்டு யாம் வருகின்றோம் என்று என் மனங்கொள்ளுமாறு; எஞ்சா வஞ்சினம் கூறி - குறையாத கடுஞ்சூள் பலவுங் கூறி; மை சூழ் வெற்பின் மலை பல இறந்து செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் - மேகந்தவழும் வெற்பாகிய மலைகள் பலவற்றைக் கடந்து பொருளீட்டும் வண்ணம் 0சென்ற யாதொரு குற்றமும் இல்லாத நங்காதலர்; தோள் இலங்குவளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நகுவது போல மின்னி - என்னுடைய தோளிலுள்ள இலங்கிய வளைகளை நெகிழும்படி செய்ததனாலாகிய கலங்கிய துன்பத்தை நோக்கி இகழ்ந்து நகைபுரிவது போல மின்னி; ஆர்ப்பது போலும் இக் கார்ப்பெயல் குரல் கேளார்கொல் - ஆரவாரஞ்செய்வது போலுகின்ற இந்த மழைபெய்யும் மேகத்தின் இடி முழக்கத்தைக் கேட்டிலர் கொல்லோ?; எ - று.