பக்கம் எண் :


371


     (வி - ம்.) அசை - செயலறவு.

     தேயந்தோறும் பருவவேறுபாடுண்மையின் அவர் சென்ற நாட்டு இக் கார்ப்பருவமில்லை போலும், இருந்தால் அறிந்துகொள்வாரே என்பாள், கேளார்கொல்லோ வென்றாள். அவர் தவறுநரல்ல ரென்பாள் செயிர்தீர் காதலரென்றாள். இஃது அருண்மிகவுடைமை. வஞ்சினங் கூறிச் சென்றனர் என்றது குறித்த பருவத்து, வாராவிடின் வஞ்சினத்தான் அணங்கப்படுவர்கொலென இரங்கினாளாயிற்று; இது தெய்வமஞ்சல். ஏனை மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) "அரும்புணர்வு ஈன்ம் என" என்றும் பாடம்; இப்பாடமே சிறப்புடையதுமாகும். ஈனும் எனற்பாலது, ஈற்றுயிர் மெய்கெட்டு நின்றது. இல்லை என்னுஞ் சொல் இன்ம் என வருவதற்கு விதியின்மையும் நோக்குக. இசை இம்மைப் பயனாதலும் இன்பம் இருமைக்கும் பயனாதலும் ஈதல் இவ்விரண்டிற்கும் காரணம் ஆதலும் பற்றி இம்முறையே நிறுத்திய நயம் உணர்க.

     அகன்ற காதலரை, அஃது அவன் அறக்கடமை என்பது பற்றிச் செயிர்தீர் காதலர் என்று பாராட்டிய தலைவியின் மாண்பு உணர்க. இதன்கண் தலைவன் வஞ்சினம் பிழைக்குமோ என்றே தலைவி வருந்துகின்றனள் என்க. "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்" என்னும் இவ்வருமையான பொருள் பொதிந்த சொற்றொடர் தலைவன் கூற்றாகும். இதனைத் தலைவி கொண்டு கூறுகின்றனள்.

(214)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, பகற்குறி வந்து மீள்வானை "அவள் ஆற்றுந் தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற்பாலீர்; எமரும் இன்னதொரு தவற்றினர்" எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, வெளிப்படை.

     (இ - ம்.) இதற்கு, "வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

     துறை : (2) இரவுக்குறிமறுத்து வரைவுகடாயதூஉமாம்.

     (து - ம்.) என்பது, களவொழுக்கத்து இரவுக்குறி வருந் தலைமகனை அங்ஙனம் வாராதபடி தடுத்து மணம்புரிந்து கொள்ளும் வண்ணங் குறிப்பாற் கூறாநிற்பதுமாகும்.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் ............................. அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியால் அமைத்துக் கொள்க.

    
குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப் 
    
பகல்கெழு செல்வன் குடமலை மறையப் 
    
புலம்புவந் திறுத்த புன்கண் மாலை