பக்கம் எண் :


375


கேட்டவர் போல ஓரளவு இரங்குவாரேனும் வருந்துபவரல்லர். அன்புடையோர் மட்டுமே வருந்துவர். என்பாற் றலைவன் அன்பிலன் ஆதலின் அவன்கூட என்னிலை கேட்டு வருந்துவானல்லன் போலும் எனப் புலந்து கூறினாள் எனக் கோடலே தகுதியாம் என்க. பிறர் என்றது தலைவனை என்க. மதுரை மருதனிளநாகனார் சிலப்பதிகார காலத்துக்கு முந்தியவர் ஆதல் வேண்டும் என்று ஊகிக்கப்படுவதாலும் திருமாவுண்ணி என்று கண்ணகியாரை யாண்டும் கூறக் கேட்கப் படாமையாலும் கண்ணகியார் என்று கருத இடனில்லை; ஆராய்க!

(216)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, தலைமகள் வாயில் மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் மீண்டுவந்து தலைவி புலந்திருப்பது அறிந்து அப்புலவியைத் தணிக்கவேண்டித் தோழியை விடுப்ப அத் தோழியைத் தலைவிநோக்கி "நம் மலைநாடன் மிக இனியனாயினும் புலவி நீக்கிக்கூடுதல் நல்ல இன்பத்தைத் தருதலால் யான் ஊடுகிற்பேன்கா"ணென வெகுண்டு கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை...............வாயிலின் வரூஉம் வகை" (தொல். கற். 6) என்னும் விதி கொள்க.

    
இசைபட வாழ்பவர் செல்வம் போலக் 
    
காண்டொறும் பொலியுங் கதழ்வாய் வேழம் 
    
இருங்கேழ் வயப்புலி வெரீஇ அயலது 
    
கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் 
5
பெருஞ்சினந் தணியுங் குன்ற நாடன் 
    
நனிபெரிது இனியன் ஆயினுந் துனிபடர்ந்து 
    
ஊடல் உறுவேன் தோழி நீடு 
    
புலம்புசேண் அகல நீந்திப் 
    
புலவி உணர்த்தல் வண்மை யானே. 

    (சொ - ள்.) தோழி இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம் - தோழீ! புகழ் மிகும்படி வாழ்கின்றவருடைய செல்வம் பொலிவடைதல் போலக் காணுந்தோறும் பொலிந்து தோன்றுகின்ற விரைந்த செலவினையுடைய களிற்றுயானை; இருங்கேழ் வயப் புலி வெரீஇ அயலது கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் - தன்னெதிர்நிற்க இயலாது கரிய நிறத்தை உடைய வலிய புலி வெருவியோடுதலாலே அயலிலுள்ளதாகிய கரிய அடியையுடைய வேங்கைமரம் சிதைவுபடுமாறு முறித்துத் தள்ளித் தனது சினந் தணியாநிற்கும் மலைநாடனாகிய