பக்கம் எண் :


377


கூகையுங்குழறும், அன்றி அன்றிலின் குரலையுங் கேட்குவன்கொலாம்" என்று அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே 
    
எல்லியும், பூவீ கொடியிற் புலம்படைந் தன்றே 
    
வாவலும் வயின்தொறும் பறக்குஞ் சேவலும் 
    
நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும் 
5
மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் 
    
கூறிய பருவங் கழிந்தன்று பாரிய 
    
பராரை வேம்பின் படுசினை யிருந்த 
    
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் 
    
ஆனா நோயட வருந்தி யின்னுந் 
10
தமியேன் கேட்குவென் கொல்லோ 
    
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே. 

    (சொ - ள்.) ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்று எல்லியும் பூ வீ கொடியில் புலம்படைந்தன்று - ஆதித்த மண்டிலம் மேலைத் திசையிலிறங்கிக் கதிரும் மழுக்கம் அடைந்தது. இராப்பொழு தென்பதும் பூவுதிர்ந்த கொடிபோல ஞாயிற்றை யிழந்து தனித்துப் பொலிவு குன்றாநின்றது; வயின்தொறும் வாவலும் பறக்கும் - இடங்கள் தோறும் வௌவாலும் பறந்து உலவாநிற்கும்; சேவலும் நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும் - ஆந்தையின் சேவலும் மகிழ்ச்சி மிகப்பெற்றுத் தான் நகைக்குந் தோறும் தன் பெடையை அழையாநிற்கும்; மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் கூறிய பருவம் கழிந்தன்று - இவையேயுமன்றித் தீராத ஆசையுடனே நெறிப்பட என்னைத் தேற்றிய காதலர் கூறிய பருவமும் மெல்ல மெல்லச் செல்லாநின்றது; பாரிய பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் - இடையிடையே நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் பெரிய கிளையிலிருந்த குராலாகிய கூகையும் இரவுமுழுதும் குழறா நிற்கும்; ஆனா நோய் அட வருந்தி இன்னும் தமியேன் - இத்தகைய இரவிலே தீராத காமநோய் துன்புறுத்துதலாலே வருத்தமடைந்து இத்துணைநாளும் வருந்தியதன்றி இன்னும் தமியளாயிருந்து; பரி அரைப் பெண்ணை அன்றில் குரல் கேட்குவென்கொல்லோ - பருத்த அடியையுடைய பனைமடலிலே இருக்கும் அன்றிலின் குரலையுங் கேட்டு மாழ்குவேனோ? எவ்வண்ணம் இதனை ஆற்றியிருப்பேன்? எ - று.