பக்கம் எண் :


383


விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; வம்பு விரித்து அன்ன செம்புலப் புறவின் - இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அணிப் பெருவழி நீள் இடைப் போழ நின் வினைசெய் நெடுந்தேர் செல்க-நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக; எ - று.

     (வி - ம்.) கருவிளை - கருங்காக்கணம். தோன்றி - செங்காந்தள். வம்பு - நறுமணம். நவிலுதல் - பயிலுதல். இழையையுடைய புதல்வனென்க. வந்தீக: வருகவென்னும் வினைச்சொல்லின் திரிபு. "போர்யானை வந்தீக ஈங்கு" என்றார் (86) கலியினும்.

    காதலி தன்னுள்ளமகிழ்ச்சியால் புதல்வனை எழுப்புவது முதலிற் கூறினான். காதலியும் புதல்வனும் தன்னைக் கண்டவழி கழியுவகை மீதூர்தலானும் அவருவகையைக் கண்டவுடன் தான் வழிவரும் வருத்தம் நீங்கப் பெறுதலுண்மையானும் அவள் புதல்வனையெழுப்புங் கிளவியைத் தான் கேட்டு மகிழுமாறு விரைந்து தேர்செல்வதாக வென்றான்.்மெய்ப்பாடு் - உவகை. பயன் - பாகன் விரைந்து தேர்கடாவல்.

     (பெரு - ரை.) செய்வினை நெடுந்தேர் என்பதற்கு அணிசெய்தலை யுடைய நெடிய தேர் எனினுமாம்.

    அந் தீங் கிளவி கேட்கம் என வினைமுற்றாகக் கண்ணழித்துத் தேர் செல்க யாம் அக்கிளவியைக் கேட்போமாக எனப் பொருள் கூறலுமாம். நாள் செய்தல் நவிலாச் சீறடி எனக் கண்ணழித்துக் கொள்க. இச் செய்யுளில் தலைவன் தான் கண்டின்யைபுற எண்ணும் தலைவியின் நிலை மிகவும் சிறந்த இன்பம் நல்கும் நிலையாதல் உணர்க. முல்லைநில வண்ணனை மிகவும் இனிதாதலும் உணர்க.

(221)
  
திணை : குறிஞ்சி.

துறை : இது, தோழி தலைமகன் வரவுணர்ந்து சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.

     (து - ம்.) என்பது, தலைமகன் களவொழுக்க மேற்கொண்டு ஒழுகுபவன் ஒருநாள் பைய ஒருபுறமாக வருதலையறிந்த தோழி உள்ளுறையால் தலைவியை இல்லிடத்துச் செறித்ததையும் குறிப்பால் அவன் இன்றியமையாமையையும் அறியப்படுத்தி வரைவுகடாவுவாளாய்த் தலைவியை நோக்கித் தோழி! நீ அவருடைய குன்றத்தையேனுங் கண்டு மகிழும்படி வேங்கையிலே கட்டிய கயிற்று ஊசலிலே நின்னைவைத்து வீசியாட்டவோ ஒன்று கூறாயென அழுங்கிக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும்...............அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.