பக்கம் எண் :


384


    
கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை 
    
வடுக்கொளப் பிணித்த விடுமுரி முரற்சிக் 
    
கைபுனை சிறுநெறி வாங்கிப் பையென 
    
விசும்பாடு ஆய்மயில் கடுப்பயான் இன்று 
5
பசுங்கா ழல்குல் பற்றுவன் ஊக்கிச் 
    
செலவுடன் விடுகோ தோழி பலவுடன் 
    
வாழை ஓங்கிய வழையமை சிலம்பில் 
    
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது 
    
பெருங்களிறு பிளிறுஞ் சோலையவர் 
10
சேணெடுங் குன்றங் காணிய நீயே. 

     (சொ - ள்.) தோழி பலவுடன் வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் - தோழீ! பலவாகிய மலைவாழையும் உயர்ந்த சுரபுன்னைகளும் பொருந்திய மலையின்கண்ணே; துஞ்சு பிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது பெருங்களிறு பிளிறும் - துயிலுகின்ற பிடியானையின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் அப்பிடியைக் காணப்பெறாது பெரிய களிற்றுயானை பிளிறாநிற்கும்; சோலை அவர் சேண் நெடுங் குன்றம் நீ காணிய - சோலையையுடைய அவரது உயர்ந்த நெடிய மலையை நீ பார்த்தேனும் நினது கவலை தணியும்படியாக; கருங் கால் வேங்கைச் செவ் வீ வாங்கு சினை வடுக்கொளப் பிணித்த - கரிய அடியையுடைய வேங்கையின் சிவந்த மலர்களையுடைய வளைந்த கிளையிலே தழும்புபடக் கட்டிய; முரி விடு முரற்சிக் கை புனை சிறு நெறி வாங்கி - வளையவிட்ட கயிற்றினாலாகிய கைவன்மையாலே செய்த சிறிய முடக்கத்தையுடைய ஊசலை யிழுத்து; பையென யான் இன்று அல்குல் பசுங் காழ் பற்றுவன் விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப ஊக்கிச் செலவுடன் விடுகோ - மெல்ல நின்னை யேற்றிவைத்து யான் அப்பொழுது நின்னுடைய அல்குலின் மேலே கிடந்த பசிய பொன்னாலாகிய வடத்தைப்பற்றி ஆகாயத்திலே பறக்கின்ற அழகிய மயிலே போல நின்னை ஆட்டி நீளச் சென்று மீளும்படி விடுவேனோ? ஒன்று கூறிக்காண்! எ - று.

     (வி - ம்.) முரி - முரிவு, ஒடிவு. முரற்சி - கயிறு. நெறி - நெறிப்பு; புரியின் முடக்கம்.

    மனைவயிற் காவற்படுத்தியதனாலே தலைவனை முயங்கவும் காணவும் இயையாமையால் அவன் குன்றத்தை நோக்கியேனுஞ் சிறிது ஆறுதல் கொள்ளுமாறு மனைமுன்றிலின்கணுள்ள வேங்கையிலே தொடுத்த ஊசலில் வைத்து நின்னை யாட்டுகோவென்றாள்; வீசியாட்டும்பொழுது உயரப்போகுங் காலத்து அவன் குன்றங் காணப்படுமாதலால். இஃது இல்வயிற்செறித்ததும் அவன் இன்றியமையாமையுங் கூறியதாயிற்று. இனிக் களவுநிகழ்தற்கின்மையானும், பிரிவாலே தலைவி இறந்துபடுமாகலானும்