(து - ம்.) என்பது, பிரிவுக்காலத்துத் தலைவியின் துன்பம் நீங்குமாறு தேற்றுதற்கு உரையெடுத்த தோழி அதனை ஏற்றுக்கொள்ளாது தலைவி ஆற்றியிருப்பதை யறிந்து வியந்து, "மடந்தாய், அவர் கூறிய பருவ வரவின் அடையாளமாக மழைவாராநின்றது கண்டாய்; அது காறும் தலைவர் நீத்தகன்றனரெனக் கூறினாயுமல்லையே, இஃதென்ன வியப்"பென மாறுபடக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 5) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனால் அமைத்துக் கொள்க.
| நனிமிகப் பசந்து தோளுஞ் சாஅய்ப் |
| பனிமலி கண்ணும் பண்டு போலா |
| இன்னுயிர் அன்ன பிரிவருங் காதலர் |
| நீத்து நீடினர் என்னும் புலவி |
5 | உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை |
| உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை |
| இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் |
| புரவெதிர்ந்து தொகுத்த யானை போல |
| உலக முவப்ப ஓதரும் |
10 | வேறுபல் உருவின் ஏர்தரு மழையே. |
(சொ - ள்.) மடந்தை - மடந்தாய்!; வியப்பு உடை இரவலர் வரூஉம் அளவை - வியப்புடைய இரவலர் வரும் பொழுது; புரவு எதிர்ந்து அண்டிரன் தொகுத்த யானை போல - அவர்கட்குக் கொடுப்பது கருதி "ஆய்அண்டிரன்" சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகம் உவப்ப ஓது அரும் வேறுபல் உருவின் ஏர்தரு மழை - உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவ உவக்காண் - ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; நனிமிகப் பசந்து தோளும் சாஅய் - இதுகாறும் மிகப் பசந்து தோளும் வாட்டமடைந்து; பனி மலி கண்ணும் பண்டு போலா - நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உள்கொண்டு - இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று