பக்கம் எண் :


414


வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; கானம் திண்ணிய மலை போன்றிசின் - அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; இவ் உலகு படைத்தோன் - அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; ஐது ஏகு - அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக! எ - று.

     (வி - ம்.) அவல் - பள்ளம். கணிச்சி - குந்தாலி. இடைப்படல் - இடையீடுபடுதலுமாம். திருகியென்பதைத் திருகவெனத் திரிக்க. பத்தல்போலச் சிறிதாகத் தோண்டப்படுதலிற் பத்தலென்றார்; இது கிணற்றினீரை யெடுத்து ஊற்றி ஆனிரையை உண்பித்தற்குத் தோண்டப்படுவது.

     இறைச்சி :- ஆனிரை யுண்பிக்கும் வண்ணம் ஆயர் கூவலருகிலே பறித்த குழியாகிய பத்தலி னிரப்பிவைத்த நீரை யானையினம் உண்ணா நிற்கும் என்றது, இப்பொழுது தலைவனாலே துய்க்குமாறு சமைந்த என் நலனைப் பசலையுண்டொழிக்கு மென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (2) உரை :- நெஞ்சமே! குறுமகளை முயங்கு முயக்கம் வேண்டா என்று வெறுத்து நீங்குதலானே பருத்த கொங்கையை யுடையாளது மெய்துயிலின்றி வருந்துவதாயினும், யான் இப்பொழுது செல்லும் கானமானது மலைபோல அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அக்கானம் பரவிய பாலைநிலத்தைப் படைத்த கொடிய இறைவன்தானும் அதன் கண்ணே மெத்தெனச் சென்று துன்புறுவானாக; எ - று.

     இறைச்சி :- யான் துய்க்கவேண்டிய நலத்தைப் பசலையுண்டொழிக்கும் என்றதாம், மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய அச்சம்பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.

     (பெரு - ரை.) கானம் மலைபோன்றிசின் என்றது, காடு மலை போன்று கடத்தற் கரியதாகத் தோன்றுகின்றது என்றவாறு. இது பண்புவமை. உலகியலினும் செயற்கரிய செயல் ஒன்றனைக் கருதி அஃது எனக்கு மலைபோலத் தோன்றுகின்றது எனல் காண்க. "வீங்குமுலை யாகம் துயிலிடைப் படூஉந் தன்மையது" என்றது, அன்பினது அகலம் கானம் மலைபோன்றது என்றது, தாளாண் பக்கம். அஃதாவது - முயற்சியான் வரும் வருத்தத்தை உணரும் உணர்ச்சியோடு அப்பொருட்பிரிவு பொருந்தாமையாம். இவ்வுலகு என்றது இந்தப் பாலை நிலத்தை என்றவாறு. நிலத்தின் பகுதிகளையும் தனித்தனி உலகு என்றே கூறும் மரபினை, "மாயோன் மேய காடுறையுலகமும்" (தொல். அகத். 5) என்னும் நூற்பாவனும் உணர்க.

(240)
  
     திணை : பாலை.

     துறை : இது, தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

     (து - ம்.)என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிதலாலே வருந்திய தலைமகளை "நீ வருந்தாது வலிதிற் பொறுத்திருப்பா"யென்ற தோழியை