பக்கம் எண் :


425


செய்யினும் - நீ தலையளி செய்யாயாயினும் அவள் விரும்பாத வற்றை வெறுக்கும்படி செய்தாயெனினும்; நின் வழிப் படூஉம் என் தோழி நல் நுதல் - நின் உள்ளஞ் சென்றவழி நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியில்; இருந்து இறை கூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை செல்மே - இருந்து நிலை மிகுதலைக்கொண்ட பசலை நோய்க்கு நீயே மருந்தாவதன்றி மற்றொரு மருந்தில்லாமையை நீ நன்றாக அறிந்தனையாகில் பின்பு செல்வாயாக! எ - று.

    (வி - ம்.)எஃகுதல் - வில்லாலடித்தல். நயனில் - விரும்பாதன. இறைகூடுதல் - நிலைமிகுதல்.

    இல்லற நிகழ்த்த நின்னுள்ளம் போல் ஒழுகுபவளென்பாள், நின் வழிப்படூஉம் என் தோழியென்றாள். வரைந்து பிரியாதுறைந்து பலகாலும் முயங்கிய வழியே பசலைமென்மெலத் தணியுமென் றறிவுறுத்துவாள், பசலைக்கு மருந்து பிறிதில்லையென்றாள். இது, பசலைபாய்தல்.

    உள்ளுறை :-புலியைக்கொன்ற யானையின் கோடு கழுவும்படி மழைபொழிந்த மேகம் விளர்த்து வைகறையில் வரைமீ தியங்குமென்றது, வேற்றரசைவென்ற நின்னுடைய காமந்தணியும்படி பெரிய இன்பத்தைக் கொடுத்த தலைவி நீ கைவிடுதலாலே பின்பு விளர்த்துக்காட்டும் என்பதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) இது, தலைவியின் பசலைநோய் அறிவுறுத்துக் காலம் நீளின் இவள் இறந்துபடுதலும் கூடும் ஆதலால் நீட்டியாது விரைந்து வந்து இவளைப் பாதுகாத்துக்கொள் என ஓம்படுத்துரைத்ததாம். அழிதுளி என்று கண்ணழித்து மிக்க துளி என்று பொருள்கொள்ளுதலுமாம். நயனில செய்தல் - வரைதற்கு முயலாமையும் ஒருவழித் தணத்தலும் பிறவுமாம். நின்வழிப்படூஉம் இவள் என்றது நீ விரும்பி யாங்கு பகற்குறி இரவுக்குறி யிடங்களிலே வந்து மகிழ்ச்சி விளைத்தவள் என்றவாறு.

(247)
  
     திணை : முல்லை.

     துறை ; இது, பருவங்கொண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்துப் பருவமறுத்தது.

    (து - ம்.)என்பது, அங்ஙனம் மழைமேல் வைத்துப் பருவமறுக்கின்றாள் தலைவர் தாம் கார்ப்பருவத்து வருவேமென்றார்; அதற்குள்ளாக மேகமே நீ இவள்பால் அன்பின்மையால் இடையில் வந்து பெய்யத் தொடங்கி மருட்டிப் பெய்தலையுடைய நின் பொய்நீர்மையை மெய்ந்நீர்மையாகக் கொண்டு மயங்குகின்ற மயிலின்குழாம்போல, யான் மயங்கேனென மறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்தகிளவி" (தொல். கள. (23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.