(து - ம்.)என்பது, களவொழுக்கத்துத் தலைமகன் வரைவிடை வைத்துச் சென்றான் நீட்டித்தலும் வருந்திய தலைவி, முன்பு நமது சேரியில் அலரெழுந்தமையால் அதுபொறாத கொண்கனது தேர் தடுக்கவும் நில்லாது சென்றுவிட்டதன்றோ? ஆதலின் அவன் மீண்டுவந்து வரைவது முளதாமோ என அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் .................... தானே கூறுங் காலமு முளவே" (தொல். கள. 21) என்னும்" விதி கொள்க.
| இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை |
| நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும் |
| வெள்ளி அன்ன விளங்கிணர் நாப்பண் |
| பொன்னின் அன்ன நறுந்தா துதிரப் |
5 | புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல் |
| வரிவண் டூதலிற் புலிசெத்து வெரீஇப் |
| பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத் |
| தாங்கவுந் தகைவரை நில்லா ஆங்கண் |
| மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி |
10 | அம்பல் மூதூர் அலரெழச் |
| சென்றது அன்றோ கொண்கன் தேரே. |
(சொ - ள்.) இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும் - இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தாது உதிர - வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலிப்பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் வரி வண்டு ஊதலின் - புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; புலிசெத்து வெரீஇத் தாங்கவும் தகை வரை ஆங்கண் நில்லா - இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ - தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; மல்லல் அம் சேரி கல் எனத் தோன்றி அம்பல் மூதூர் அலர் எழ - வளப்ப