(து - ம்.) என்பது, தலைமகன் குறையுற்றும் அக்குறை நீக்கப் பெறானாய்ச் செல்கின்றானை ஆற்றுவிக்கக் கருதிய தோழி புதியனவாகிய சில மொழிகளை அமைத்துக் கொண்டு 'பரப்பனே! நீ எஞ்சிறு குடியின் கண் இன்றிரவு தங்கிச் செல்லுவையாயின் நின்பரிகள் உணவுண்ண நீயும் தனியாகத் தங்குவை அல்லை'யெனப் புனைந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும் |
| குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும் |
| துனியில் நன்மொழி இனிய கூறியும் |
| சொல்லெதிர் பெறாஅய் ஆகி் மெல்லச் |
5 | செலீஇய செல்லும் ஒலியிரும் பரப்ப |
| உமணர் தந்த உப்புநொடை நெல்லின் |
| அயினி மாஇன்று அருந்த நீவீக் |
| கணம்நாறு பெருந்தொடை புரளும் மார்பின் |
| துணையிலை தமியை சேக்குவை அல்லை |
10 | நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி |
| வானம் வேண்டா உழவினெம் |
| கானலஞ் சிறுகுடிச் சேர்ந்தனை செலினே. |
(சொ - ள்.) வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும் - பகற்பொழுதெல்லாம் எம்முடன் வண்டல்மண்ணை வீடுபோலச் சமைத்துக் கோலஞ் செய்தும் கரைமேல் ஏறுகின்ற அலையை எற்றியும்; குன்று ஓங்கு வெள் மணல் கொடி அடும்பு கொய்தும் - மலைபோல் உயர்ந்த வெளிய மணல் மேட்டிலே படர்ந்த கொடி யடும்பின் பூவைப் பறித்தும்; துனி இல் நல் மொழி இனிய கூறியும் - வருத்தந் தீர்ந்த நல்ல வார்த்தை இனியவற்றைக் கூறியும்; சொல் எதிர் பெறாஅய் ஆகி - அங்ஙனம் நீ கூறியவற்றிற்கு