(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் தலைமகளைத் தழுவலும் அவள் கொண்டிருந்த சினத்தை உள்ளடக்கி உடன்பட்டாள் போன்று "ஊரனே! நீ இப்பொழுது மிக்க விருப்பமுற்றாய் போன்று புல்லுகின்றனை, முன்பு என் கோதை வாடுமாறு வையகன்று ஒழிந்தா யென்பதை யான் அறிவேன்" என உள்ளுறையால் அவன் பரத்தையிற் பிரிந்ததனையுங் கூறி ஊடல் நீங்கா நிற்பது.
(இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல். கற்.6) என்னும் நூற்பாவின்கண் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" என்பதனாலமைத்துக் கொள்க.
| கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை |
| பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத் |
| தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது |
| குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர |