5 | வெய்யை போல முயங்குதி முனையெழத் |
| தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் |
| மலிபுனல் வாயில் இருப்பை அன்னஎன் |
| ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த |
| முகையவிழ் கோதை வாட்டிய |
10 | பகைவன் மன்யான் மறந்தமை கலனே. |
(சொ - ள்.) கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத்தாமரைப் பனி மலர் முணைஇ - கழுநீர் மலரை மேய்ந்த பெரிய (கரிய) காலையுடைய எருமை அயலிலுள்ள வயலிலே படர்ந்த தாமரையின் குளிர்ந்த மலரைத் தின்பதனை வெறுத்துவிட்டு; தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது குன்றுசேர் வெள் மணல் துஞ்சும் ஊர - கையிலே தடிகொண்ட வீரரைப்போலச் செருக்கி நடந்து அதன் பக்கத்துள்ள குன்று போலக் குவிந்த வெளிய மணலின்மீது துயிலாநிற்கும் ஊரனே!; வெய்யைபோல முயங்குதி - நீ இப்பொழுது விருப்பமுடையாய் போலப் பலகாலும் என்னைத் தழுவிக் கொள்கின்றனை; முனை எழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் இருப்பை அன்னஎன் - பகை மிகுதலாலே ஆண்டு வந்த பகைவரை யழித்த சிவந்த வேற்படையையுடைய வீரனாகிய 'விராஅன்' என்பவனது நிறைந்த "புனல்வாயிலை" அடுத்த "இருப்பையூர்" போன்ற என்னை விட்டொழிதலானே; ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய பகைவன்மன் - என்னுடைய தழைத்த பலவாகிய கூந்தல் அழகு பெற அலங்கரித்த அரும்பு மலர்ந்த பூமாலை வாடும்படி செய்த மிக்க பகைவனல்லையோ?; யான் மறந்து அமைகலன் - யான் நின் செய்கையை மறந்திருப்பேனல்லேன் காண்; ஆதலின் என்னைத் தொடாதே கொள்; எ - று.
(வி - ம்.) பழனம் - நீர்நிலைவயல்.
மெய்ம்மையாக என்பால் நினக்கு அன்பில்லை யென்பாள் வெய்யைபோல முயங்குதி யென்றாள். கோதை புனைந்ததன் பயனாகிய புணர்ச்சி எய்தப் பெறாமையிற் கோதைவாட்டிய பகைவனென்றாள். தொடராதே என வெறுப்புக்கொண்டமை குறிப்பாள் மறந்தமைகலனென்றாள். பணிந்து வேண்ட ஊடல் தீர்வாளாவது.
உள்ளுறை :- தாமரை மலரை வெறுத்துக் கழுநீரை மேய்ந்த எருமை மணற்குன்றிலே சென்று தங்குமென்றது, தலைவி நலனை வெறுத்துக் காதற் பரத்தையின் இன்பந் துய்த்த தலைவனே, நீ ஆண்டுந்தங்காயாய்ச் சேரிப்பரத்தையின் மனையின்கண்ணே சென்று உறங்குவாயாயினா யென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - ஊடல்தீர்தல்.