பக்கம் எண் :


459


     (வி - ம்.) இழைத்த என்பதனை வினைப்பெயராக்கி நான்கனுருபு கொடுத்துக் கூறுக. தந்து என்பதனைத் தரவெனத் திரிக்க.

    சிறைப்புறமாகிய தலைமகன் கேட்டு விரைய வரையுமாற்றானே அவன்பால் இறைமகள் கைகடந்த காதலுடையளெனவும் அவன் அங்ஙனம் இலனாயினானெனவுங் கூறுவாள் நாடற்குக் காதல் செய்துங் காதலம் அன்மை என்றாள்.

     உள்ளுறை :-கருங்கோற் குறிஞ்சியின் மதனிலவாகிய பூ இல்லகத்து இழைத்த தேனடைக்கு மிக்க தேனூறுமென்றது, குறவர் மகளிரேம் ஆகிய யாம் மருதநிலத் தலைவன் மகனாகிய நம் காதலன்பால் வழிமுறை பெருகற்பாலதாகிய நட்புவைத்துள்ளோம்; அதனை அவன் அறிந்தானில்லையே யென்று இரங்கியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) நாடற்குக் காதல் செய்தும் என்றது நாடனைக் காதலித்திருந்தும் என்றவாறு. "ஒருதலையான் இன்னாது காமம்" என்பதுபற்றி் நாம் காதலிக்குமளவு நம் பெருமானும் நம்மைக் காதலித்திலன்; காதலித்திருப்பின் அவன் வரைந்துகொண்டிருப்பன். வரையாமையாலன்றோ வெறியெடுத்தன் முதலிய வீண்துயர்கள் எய்துகின்றன, என்று வருந்தியபடியாம். வன்மையில்லாத பேதையாகிய குறிஞ்சிப் பூக்கள் தமக்குக் கைம்மாறேதும் இயற்றாத தேனடைக்குத் தாம் தேனூறி நல்குதல் போன்று நம்பால் காதலில்லாத நம் பெருமானுக்கு நாம் மட்டும் காதல் கனிந்த பேதையரேமாயினேம் என்பாள் குறிஞ்சிப்பூ இல்வரை இழைத்தனவற்றிற்குப் பிரசம் ஊறும் என்றாள் என்க. 'காதல் செய்தவும் காதலம் அன்மை' என்றும் பாடம். இதே சிறந்ததுமாம்.

(268)
  
     திணை : பாலை.

     துறை : (1) இது, தோழி வாயின்மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைவிகொண்ட ஊடலைத் தணித்தற்பொருட்டுத் தூதாகவிடுக்கப்பட்ட வாயிலவரைத் தோழி நெருங்கி நம் காதலர் இறைவியின் கண்கள் தம்மைப் பிணிக்குமென்றெண்ணாது கடுஞ்சுரஞ் செல்பவர் பின்பு எதைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிதலோ அவர்க்கு அரிது, அவர் கருதியவை யாவர் அறிவார் என்று மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பரணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

     துறை : (2) செலவழுங்குவித்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" என்னும் விதி கொள்க. இத்துறைக்கு இதனை முன்னிலைப் புறமொழியாகக் கொள்க.