| குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப் |
| பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன் |
| மாலைக் கட்டின் மார்பூர்பு இழிய |
| அவ்வெயிறு ஒழுகிய வெவ்வாய் மாண்நகைச் |
5 | செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி |
| திருமுகத்து அலமருங் கண்நினைந்து அல்கலும் |
| பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னார் |
| சிறுபல் குன்றம் இறப்போர் |
| அறிவார் யாரவர் முன்னி யவ்வே. |
(சொ - ள்.) குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணி - குரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும்; பால் ஆர் துவர் வாய்ப் பைம்பூண் புதல்வன் - பாலுண்ணுஞ் சிவந்த வாயையும் மற்றும் பல பசிய கலன்களையுமுடைய புதல்வன்; மாலைக்கட்டு இன் மார்பு ஊர்பு இழிய - மாலையணிதலையுடைய இன்பத்திற்குக் காரணமாகிய மார்பிலூர்ந்து இறங்குதலால்; அவ் எயிறு ஒழுகிய வெவ் வாய் மாண் நகைச் செயிர்தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி - அழகிய எயிற்றினின்றொழுகிய விருப்பமுற்ற மாட்சிமைப்பட்ட நகையையும் குற்றமற்ற கோட்பாட்டினையுமுடைய நம்முயிர் போன்ற விருப்பமிக்க காதலியினது; திருமுகத்து அலமரும் கண் நினைந்து அல்கலும் பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார் - அழகிய முகத்திலே உலாவுகின்ற கண்கள் துன்பமெய்தி நாள்தோறும் பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடியைப் போல நம்மைப் பிணிக்குமே என்று கருதாராய், சிறு பல் குன்றம் இறப்போர் - எப்பொழுதும் சிறிய பலவாய குன்றங்கடந்து சுரஞ்செல்வாராயினர், அத்தகையார் பின்பு எதனைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிந்து செல்லுதலோ அவர்க்கு அரியது, அஃதியல்புதானே; அவர் முன்னிய யார் அறிவார் - இன்னும் அவர் கருதி உள்ளவை யாவர்தாம் அறியவல்லார்? எ - று.
(வி - ம்.) குரும்பை மணிப்பூண் - அரையிற் கட்டும் கிண்கிணி.
காதலனது முயக்கம் வேண்டாது புதல்வன் முகத்தில் ஆறியிருக்கவும் அமையுமென்பாள், புதல்வனை முற்கூறினாள், காதலி முயக்கத்தை வெறுத்ததன்றிச் செறுநரும் விரும்புஞ் சேயின் காட்சியையும் வெறுத்துச் செல்பவர், யாதுதான் செய்யாரெனக் கொண்டு கூறினாளுமாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.
(பெரு - ரை.) இரண்டாவது துறைக்கு மெய்ப்பாடு அழுகை. பயன் - செலவழுங்குவித்தல் என்க. 'பெரும வள்ளியிற் பிணிக்கும்' என்றும் பாடம்.
(269)