(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனால் விடப்பட்டுக் காமக் கிழத்தியிடத்துத் தூதாக வந்த பாணனை அவட்குப் பாங்காயின விறலி நோக்கி 'ஊரனாவான் சிறிய வளையையுடைய இவட்கு இஃது ஈடென்று தனது தேரை அலங்கரித்து என் முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறாவா ளொருபரத்தைபாற் சென்றனன் கண்டாய்; அவனது தேரொடு வந்த நீயும் அவனொடு போகாது எமது அட்டிற்சாலைக் கூரையைப் பற்றி நிற்கின்றனை, அப்படியே நீ நிற்பாயாக'வென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.
துறை : (2) வரைவுகடாயதூஉமாம். மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு.
(து - ம்.) என்பது வரையாது வந்தொழுகுந் தலைமகனை நெருங்கிய தோழி 'ஐயனே! வரைவு வேண்டிவந்த அயலானொருவன் நம் தலைமகளின் வளைவிலை இதுவாகுமென்று தனது தேரை முன்றிலின்கண் வைக விடுத்து அகன்றொழிந்தனன்; நீயும் அங்ஙனம் அகன்றொழியாது போந்து மணம் புரிந்து கொள்'ளென ஆய்ந்து வரைவுகடாதல் தோன்றும் வண்ணங் கூறியதுமாகும்.