பக்கம் எண் :


510


    (வி - ம்.) தாழையிலை அடியளவுந் தாழாது மேலே சிறிதளவு தழைதலால் யானை முதுகிலிடும் ஆடையை உவமித்தார். பிசிர் - அலையின்கணெழுந் திவலை. இதிலுள்ள யாவும் உவமையும் பொருளும் ஒத்தலால் உள்ளுறையின்மை தெளிக.

    தன்னையே கேள்வனாகக் கொண்டன ளென்பதை அவன் அறியு மாற்றானே குடிபுலம்பின் அவர் என எடுத்தவள், பிறர்கேட்பர்கொல் லென்றஞ்சி இசை யெச்சத்தால் தலைவரெனக் கொள்ளுமாறு வைத்தாள். இன்றி அமையாமை கூறுவாள் நாமிலமாதல் அறிதும் என்றாள். களவினியலாமையில் புணர்ச்சி யருகியதால் அதுகழிந்ததே யென்றிரங்கினாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) 'யானை உடைகோடு அன்ன' என்றும் 'வண்டல் தாஅம்' என்றும் பாடவேறுபாடுள. இப் பாடங்களே சிறப்புடையன. இவற்றிற்கு நிரலே யானையின் உடைந்த கோடு போன்று மலர்ந்த வெண்டாழம்பூ என்றும்; மகளிர் விளையாட்டு மனைகளிலே பரவும் என்றும் பொருள் கொள்க. இனி இதன்கண் தாழை வான்பூவினைக் காற்று மோதுதலானே அதன் தாது மகளிர் ஆடலரங்கத்தே பரவும் என்றது, தலைவன் தலைவியைக் களவு மணஞ் செய்துகொண்ட செய்தியை அம்பற் பெண்டிர் தூற்றலின் ஊரெங்கும் அலர் பரவிற்று என்னும் உள்ளுறையாகக் கொள்க.

(299)
  
    திணை : மருதம்.

    துறை : (1) இது, வாயில் மறுத்தது.

    (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனால் விடப்பட்டுக் காமக் கிழத்தியிடத்துத் தூதாக வந்த பாணனை அவட்குப் பாங்காயின விறலி நோக்கி 'ஊரனாவான் சிறிய வளையையுடைய இவட்கு இஃது ஈடென்று தனது தேரை அலங்கரித்து என் முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறாவா ளொருபரத்தைபாற் சென்றனன் கண்டாய்; அவனது தேரொடு வந்த நீயும் அவனொடு போகாது எமது அட்டிற்சாலைக் கூரையைப் பற்றி நிற்கின்றனை, அப்படியே நீ நிற்பாயாக'வென வெகுண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.

    துறை : (2) வரைவுகடாயதூஉமாம். மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு.

    (து - ம்.) என்பது வரையாது வந்தொழுகுந் தலைமகனை நெருங்கிய தோழி 'ஐயனே! வரைவு வேண்டிவந்த அயலானொருவன் நம் தலைமகளின் வளைவிலை இதுவாகுமென்று தனது தேரை முன்றிலின்கண் வைக விடுத்து அகன்றொழிந்தனன்; நீயும் அங்ஙனம் அகன்றொழியாது போந்து மணம் புரிந்து கொள்'ளென ஆய்ந்து வரைவுகடாதல் தோன்றும் வண்ணங் கூறியதுமாகும்.