பக்கம் எண் :


511


    (இ - ம்.) இதற்கு, "பிறன் வரைவு ஆயினும்" (மேற்படி) என்னும் விதிகொள்க.

    
சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் 
    
மடத்தகை ஆயங் கைதொழு தாஅங்கு 
    
உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் 
    
தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன் 
5
சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் 
    
முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே 
    
நீயுந் தேரொடு வந்து போதல்செல் லாது 
    
நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நரம்பின் 
    
இரும்பா ணொக்கல் தலைவன் பெரும்புண் 
10
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் 
    
பிச்சைசூழ் பெருங்களிறு போலவெம் 
    
அட்டில் ஓலை தொட்டனை நின்மே. 

    (சொ - ள்.) நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன் - நெய்வடிந்தாலொத்த பிசிர் அடங்கிய நரம்பு பூட்டிய யாழையுடைய பெரிய சுற்றத்தையுடைய பாணர் தலைவனே!; சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதன் எதிர் - விளங்குகின்ற தொடியணிந்த அரசகுமாரி சினங்கொண்டவுடன் அவ்விடத்தில்; மடத் தகை ஆயம் கைதொழுதாங்கு - மடப்பத்தையுடைய தோழியர் குழாம் கைதொழுது இறைஞ்சினாற்போல; உறுகால் ஒற்ற ஆம்பல் ஒல்கி தாமரைக்கு இறைஞ்சும் - மிக்க காற்று மோதுதலானே ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்காநிற்கும்; தண் துறை ஊரன் சிறு வளை விலை என - தண்ணிய துறையையுடைய ஊரன் ஏனையொருத்திக்குப் பரியமளிக்க வேண்டிச் செல்லுவான் இடையே எம்மைக் காண்டலானே சிறிய வளையினையுடைய இவட்குரிய விலை இதுவென்று; பெருந்தேர் பண்ணி எம் முன்கடை நிறீஇச் சென்றிசினோன் - தன் பெரிய தேரை அலங்கரித்து எமது முன்றிலின்கண்ணே நிறுத்தியிட்டு வேறொரு பரத்தையின் மனையகம் நாடிச் சென்றொழிந்தனன் கண்டாய்; நீயும் தேரொடு வந்து போதல் செல்லாது ஏஎர் தழும்பன் 'ஊணூர்' ஆங்கண் - அவனது தேருடனே வந்த நீயும் அவன் பின்னே செல்லாது போரிலே பெரிய புண்ணால் அழகுபெற்ற 'தழும்பன்' என்பவனது ஊணூரிடத்துள்ள; பிச்சைசூழ் பெருங்களிறு போல - பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றல்போல; எம் அட்டில் ஓலை தொட்டனை நில் - எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் பனையோலையைத் தொட்டு நிற்கின்றனை; அவ்வண்ணமே நிற்பாயாக! எ-று.