பக்கம் எண் :


512


    உள்ளுறை :- காற்று மோதுதலாலே ஆம்பல் தாமரையைத் தாழும் என்றது, தலைவன் நின்னை ஏவுதலாலே நீ இங்கு வந்து இறைஞ்சி நடலை பயிற்றா நின்றனை என்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்.

    இரண்டாந் துறையின் உரை:- ஊரனொருவன் இவளைப் பொன் அணியவேண்டி இச்சிறிய வளையுடையாளுக்கு விலை ஈதென்று தனது தேரினை அலங்கரித்து நிதியத்தோடு எமது முன்றிலிற் கொணர்ந்து நிறுத்தி அந்தணர், சான்றோர் முதலாயினோரை அழைத்து வரப்போயினான்; நீயும் அவ்வண்ணம் தேரோடு வந்து நிதியந்தந்து மணந்து செல்லாது பாணர் ஒக்கலுக்கு உணவளிக்குந் தழும்பனது ஊணூரென்னு மிடத்தே களிறு நிற்றல் போல இரவுக் குறியிடமாகிய அட்டிற் சாலைக் கூரைப் பனை யோலையைத் தொட்டுக் கருதிக்கொண் டிருக்கின்றனை; அங்ஙனமே நிற்பாயாக; எ - று.

    (பெரு - ரை.) இரும்பாண் ஒக்கல் தலைவன் என்னும் தொடரையும் தழும்பனுக்கே அடையாக்கிப் பாணனே என வருவித் தோதுதல் இச் செய்யுளாசிரியர் கருத்திற் கொப்பதாம். ஏஎர் தழும்பு - விழுப்புண்ணால் உண்டான தழும்பு. இத்தகைய தழும்புடைமையால் ஏஎர் தழும்பன் எனப் பெயர் பெற்றான்போலும். அவன் ஊர்தானும் அறக்கோட்டங்கள் மிக்கு எளியவர்க்கு உண்டி வழங்குமிடமாதலாற்போலும் ஊணூர் எனப்படுகின்றது. அவ்வூரில் களிறு பிச்சைக்குச் சூழ்ந்து வரும் என்றது, அறநிலையங்கட்கு அரிசி முதலிய ஏற்றற்கு யானை தெருக்களிலே வரும் வழக்கத்தைக் குறித்தவாறு போலும்; 'பேர்தல் செல்லாது' என்றும் பாடம். இச் செய்யுளின்கண் மெல்லிய தண்டுடைமையாற் காற்றான் மோதுண்ட ஆம்பன் மலர், வன்றண்டுடைமையாற் சாயாது நிற்கும் தாமரை மலரின்பாற் சாய்தலைக் கோமகள் சினங்கொண்டு தோழியர் வணங்குதல் போன்று என உவமித்த அழகுங் கற்பனையும் உள்ளுதோறுவகை தருகின்றன.

(300)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, சேட்படுத்துப் பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையினான் என்று தோழி தன் உள்ளே சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகளைக் குறைநயப்பித்துக் கூட்டுவிக்குந் தோழி தலைவியின் அருமைபெருமை முதலாயவற்றை யறிந்து, தலைமகன் விரைவில் வரைதல் காரணமாக அவனுக்கு இயையாது மறுத்துக் கூறி அவன்படுந் துன்பத்தை அறிந்துவைத்தும் எம் அன்னை இவளைப் பலகாலும் நோக்கிப் புகழ்ந்து கூறித் தன்மனத்து மறக்கப்படாத் தன்மையளாய் இராநின்றாள் ஆதலின் இங்குக் கூட்டுவிப்பதை யறிந்தால் எத்தன்மையளாமோ? யான் இதனை அஞ்சுகின்றேனென்று தன்னுள்ளே கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருக . . . . . . . பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" என்னும் (தொல். கள. 23) விதிகொள்க.