(து - ம்.) என்பது, தலைமகளைக் குறைநயப்பித்துக் கூட்டுவிக்குந் தோழி தலைவியின் அருமைபெருமை முதலாயவற்றை யறிந்து, தலைமகன் விரைவில் வரைதல் காரணமாக அவனுக்கு இயையாது மறுத்துக் கூறி அவன்படுந் துன்பத்தை அறிந்துவைத்தும் எம் அன்னை இவளைப் பலகாலும் நோக்கிப் புகழ்ந்து கூறித் தன்மனத்து மறக்கப்படாத் தன்மையளாய் இராநின்றாள் ஆதலின் இங்குக் கூட்டுவிப்பதை யறிந்தால் எத்தன்மையளாமோ? யான் இதனை அஞ்சுகின்றேனென்று தன்னுள்ளே கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "மறைந்தவள் அருக . . . . . . . பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" என்னும் (தொல். கள. 23) விதிகொள்க.