பக்கம் எண் :


535


ஞெமுங்கப் புல்லி - குறுகிய புள்ளி அமைந்த இளைய அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள் நெருங்க அணைத்திருந்தபடியே; கங்குல் கழிவது ஆக என்றுதாம் மொழிவன்மையின் பொய்த்தனர் - 'கங்குல் கழியக்கடவதாக' என்று முன்பு கூறிய தம் மொழியளவில் வன்னெஞ்சு உடைமையாற் பொய்த்தனர்; வாழிய - அங்ஙனம் பொய்த்ததனால் ஒரேதமுமின்றி நீடு வாழ்வாராக; எ - று.

     (வி - ம்.) பித்திகம் - சிறுசண்பகம். ஞெமுங்கல் - நெருங்கல். நொடி விடல் - நெறித்துவிடல். கள்ளியின் தலை, பாவை போன்றிருத்தலிற் பாவை யென்றார். கொம்மை - இளமை.

     பிரியேனென்ற சூள் வருந்துமாதலின் அச் சூள் வருத்தாவாறு வாழிய என்றாள். செல்லுநெறி புறவு பெடையை யழைத்துப் புணருவதனை உடையதாயிருப்ப அதனை நோக்கியும் மீண்டாரில்லையே யென்றிரங்கியவாறு; இதனுள் முதிர்ந்தோர் இளமை யெய்தாரென்றது, இளமையது அருமை. வாழ்நாள் அறிஞரு மில்லை யென்றது நாளது சின்மை. ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக வென்றது, அன்பினதகலம். ஏனையவும் உய்த்துணர்க. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இது பண்டொரு காலத்தே தலைவன் கூறிய கூற்றைக் கொண்டு கூறி இவ்வாறு கூறியவர் அக் கூற்றிற் கேற்ப ஒழுகாது பொய்ப்படுத்தினர் என்று இரங்கியபடியாம். "முதிர்ந்தோர்," என்பது தொடங்கி "கழிவதாக கங்குல்," என்னுந் துணையும் தலைவன் பண்டு கூறியது. 'இளமை அழிந்தும்' என்றும் பாடம். இதற்கு முதிர்ந்தோர் பின்னர்ப் பெரிதும் தவமுதலியன செய்து வருந்தியும் கழிந்த இளமையை எய்துவார் அல்லர் என்று பொருள் கூறுக. இக் கருத்தே சிறப்புடையது மாகும்.

(314)
  
    திணை : நெய்தல்.

     துறை : இது, தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.

     (து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் மீண்டு தலைமகள்பால் வருதலும் அவள் சினமிகுதலாலே அதனை நீக்கும் வழியின்றி நின்றபொழுது அவனது இளமை முதிர்ந்த காமக் கிழத்தி தலைவியை வெகுளாதபடி கூறி உடன்படுத்துகின்றாள், 'துறைவனே! பருவஞ் சென்ற பின்னன்றோ என் போல இவளும் நின்னாலே கைவிடத்தக்கா'ளென உள்ளுறையாலும், 'நீ ஒழுங்காக ஆராய்ந்து குற்றம் வாராது நடவாயெனின் நின்னை விரும்பியோர் தீயிடைப்பட்ட மலர்போல்வ'ரென, வெளிப்படையாலுங் கடிந்து கூறி ஊடலைத் தீர்த்துக் கூட்டா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின், தாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக், காய்வின் றவன்வயின் பொருத்தற் கண்ணும்" (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.