| இளையோள் இறந்த அனைத்தற்குப் பழவிறல் |
5 | ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவிற் |
| காரி புக்க நேரார் புலம்போல் |
| கல்லென் றன்றால் ஊரே அதற்கொண்டு |
| காவல் செறிய மாட்டி ஆய்தொடி |
| எழின்மா மேனி மகளிர் |
10 | விழுமாந் தனர்தங் கொழுநரைக் காத்தே. |
(சொ - ள்.) விழவும் உழந்தன்று - ஊரிலே செய்யப்படுந் திருவிழாவுஞ் செய்து முடிந்தது; முழவும் தூங்கின்று - மத்தளமும் ஓசை யொழிந்தது; எவன் குறித்தனள் என்றி ஆயின் - இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவில் இளையோள் இறந்த அனைத்தற்கு- ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழ விறல் ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில் - பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புக்க காரி நேரார் புலம்போல் - புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; ஊர் கல்லென்றன்று - இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அதன் கொண்டு ஆய்தொடி எழில் மா மேனி மகளிர் காவல் செறிய மாட்டி - அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; கொழுநரைக் காத்து விழுமாந்தனர் - தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று; எ - று.
(வி - ம்.) உழந்தன்று - ஒடுங்கிற்றுமாம். தூங்குதல் - அடங்குதல். விழுமாத்தல் - சிறப்படைதல்.
விழவு முதலாயின இல்லாத காலத்து இவள் வெளிவந்தமையின் ஆண்பாலாரை வயமாக்கவேண்டி என்றாள். மாதர் பலரும் தம்தம் கொழுநரைக் காத்துக்கொண்டன ரென்றதனால், காவாத இவனைக் கைப்பற்றிக்கொண்டன ளென்று குறிப்பாற் கொள்ளுமாறு கூறினாள்