பக்கம் எண் :


568


     (வி - ம்.) கலை - ஆண்குரங்கு. வசிதல் - பிளத்தல்.உள்ளுறை:- மந்தி அருவியாடி ஊசலிலே தூங்கி நறுமலர் சுனையில் உதிரும்படி மரத்திலேறிக் கலையொடு புணருமென்றது, நீயும் பகலிலே அருவியாடி ஊசலில் தூங்கி இரவில் நின் காமவேட்கை முற்றுமொழியத் தலைவனொடு முயங்குவாயாக வென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - சைகை செய்து உடன்படுத்தல்.

     (பெரு - ரை.) இனி, "பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதியால் தலைவி தோழிக்குக் கூறியது எனினுமாம்.

(334)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, காமமிக்க கழிபடர் கிளவி மீதூர்ந்து தலைமகள் சொல்லியது.

     (து - ம்,) என்பது, தலைவன்பால் காமவேட்கை மிக்கதனாலாகிய மிகக் கருதிய சொல் மேம்பட்ட தலைமகள் 'திங்கள் விளங்குகின்றது; கடல் ஓசை யடங்கியது இல்லை; அன்றிலும் ஒலியா நிற்கும்; யாழும் யான் உய்யாதபடி இசையாநின்றது; அவற்றைக் கேட்டலானே எனக்குண்டாகிய காமமோ பெரியதாய் இராநின்றது; இதனை ஒழிக்க வல்ல காதலர் அருகிலில்லாது ஒழிந்தனர்; இனி யான் எவ்வாறு உய்வே'னென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.

    
திங்களுந் திகழ்வான் ஏர்தரும் இளநீர்ப் 
    
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே 
    
ஒலிசிறந்து ஓதமும் பெயரும் மலிபுனல் 
    
பல்பூங் கானல் முள்ளிலைத் தாழை 
5
சோறுசொரி குடவயின் கூம்புமுகை அவிழ 
    
வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு  
    
மையிரும் பனைமிசைப் பைதல உயவும் 
    
அன்றிலும் என்புற நரலும் அன்றி 
    
விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ் 
10
யாமம் உய்யாமை நின்றது 
    
காமம் பெரிதே களைஞரோ இலரே. 

     (சொ - ள்.) திங்களும் திகழ் வான் ஏர் தரும் - திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; இளநீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாது - மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை;