பக்கம் எண் :


569


ஒலி சிறந்து ஓதமும் பெயரும் - ஒலிமிகுந்து அக் கடனீரும் கரையை மோதிப் பெயர்ந்து செல்லாநிற்கும்; மலி புனல் பல் பூங் கானல் முள்இலைத் தாழை - நிறைந்த கழிநீர் சூழ்ந்த பலவாய அழகிய கடற்கரைச் சோலையின்கணுள்ள முள்ளையுடைய இலை மிக்க தாழை; சோறு சொரி குட வயின் கூம்பு முகை அவிழ - சோற்றைச் சொரிகின்ற குடம்போலப் பருத்த உள்ளீட்டினையுடைய கூம்பிய அரும்பு மலராநிற்ப; வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு - காற்றானது அப் பூ மடலினுள்ளே புகுந்து பரவி வந்து வீசுகின்ற கெடாத நறுமணத்தடனே; மை இரும் பனைமிசைப் பைதல உயவும் அன்றிலும் என்புறம் நரலும் - கரிய பெரிய பனைமேலிருந்து துன்பத்தைத் தருவனவாய் வருத்துகின்ற அன்றிற் பறவையும் என் பக்கத்தே வந்து ஒலியாநிற்கும்; அன்றி விரல் கவர்ந்து உழந்த கவர்வு இன் நல் யாழ் யாமம் உய்யாமை நின்றது - இவையேயன்றி, விரலாலே தடவி வருந்தி இசை கூட்டிய விருப்பத்தைச் செய்யும் நல்ல யாழும் இரவு நடுயாமத்து யான் உயிர் வைத்து உய்யாவாறு இசையாநின்றது; காமம் பெரிது - அவை அனைத்தினுங் காட்டில் யான் கொண்ட காமமோ பெரிதாயிராநின்றது; களைஞர் இலர் - இதனைப் போக்க வல்ல காதலரோ அருகில் இல்லாது ஒழிந்தகன்று போயினார், இனி யான் எவ்வாறு உய்குவேன்? எ - று.

     (வி - ம்.) முற்கூறிய அவையனைத்துங் காமத்தை மிகுதிப்படச் செய்தலானே காமம் பெரியதே யென்றாள். களைஞர் இன்மையால் உய்வேனலேன் இறந்து படுவது திண்ணமெனக் கருதினாளாயிற்று. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) இளநீர் - மென்மைத் தன்மை. பாடு - ஓசை. கவர்வு - விருப்பம்; கவர்ச்சி. "இமிழ்நீர்ப் பொங்கு திரை" என்றும் "சோறு சொரி குடையின்" என்றும் பாடம்.

(335)
  
     திணை : குறிஞ்சி.

     துறை : இது, ஆறுபார்த்துற்றுச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, இரவிலே கொடிய நெறியின்கண்ணே களவொழுக்கத்து வருந் தலைமகனை மறுத்து வரைவுடன்படுத்தக் கருதிய தோழி நெருங்கி நாடனே! இரவில் நெறியினது ஏதம் அஞ்சாது வாராநின்றனை; அதனை யான் நினையாமுன் அஞ்சுகிற்பேனாதலால் அவ் வரைநெறியில் வாராது ஒழிவாயாக என அந்நெறியினது ஏதங்கூறி உள்ளுறையால் இவளை வதுவையயர்ந்து மனையறம்படுத்து வாழ்கவென நுவன்று வரைவுகடவா நிற்பது.

     (இ - ம்.) இதனை, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க; இனி, "களனும் பொழுதும் . . . .