(து - ம்.) என்பது, களவின் வழி வந்தொழுகுந் தலைமகன் இடையீடு முதலாய காரணங்களாலே சிலபொழுது வாராதொழிதலும், தலைமகளின்மேனி மெலிந்து வாடியதறிந்த அன்னை அது முருகணங்குபோலுமென்று வேறாக உணர்ந்து வெறி அயருமாறு தொடங்கினாளாக, அது கண்ட தோழி அருகு சென்று அன்னையை, நீ வெறியயர்ந்து வருந்தாதே கொள;் என் தோழியை இன்னு மொருகால் நமது புனங்காவ லோம்புமாறு செல்ல மொழிவையேல், அவள் இழந்த நலனை யெய்துவள் காணென ஆய்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு,
| "ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் |
| பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்" (தொல். கள. 23) |
என்னும் விதிகொள்க.
| இளமை தீர்ந்தனள் இவளென வளமனை |
| அருங்கடிப் படுத்தனை யாயினுஞ் சிறந்திவள் |
| பசந்தனள் என்பது உணராய் பல்நாள் |
| எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி |
5 | வருந்தல் வாழிவேண்டு அன்னை கருந்தாள் |
| வேங்கைஅம் குவட்டிடைச் சாந்தி் செய்த |
| களிற்றுத்துப்பு அஞ்சாப் புலியதள் இதணத்துச் |
| சிறுதினை வியன்புனங் காப்பின் |
| பெறுகுவள் மன்னோஎன் தோழிதன் நலனே. |
(சொ - ள்.) அன்னை வாழி வேண்டு - அன்னாய்! வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; இவள் இளமை தீர்ந்தனள் என - இவள் பெதும்பைப் பருவம் நீங்கப் பெற்றவளென்று; வள மனை அருங்கடிப் படுத்தனை ஆயினும் - வளம் பொருந்திய மாளிகையிலே பெயர்ந்து போதற்கரிய காவலுட்படுத்தினையாயினும்; சிறந்த இவள் பசந்தனள் என்பது உணராய் - சிறந்த இவள் பசப்படைந்தனள் என்பதனை உணர்ந்தனை யல்லையாய்; பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் - பல நாளும் துன்பம் பொருந்திய நெஞ்சத்துடனே முருகவேளை விரும்பி இல்லகத் தழைத்து வெறிக்களந் திருத்தி வெறியெடுத்து வருந்தாதே கொள்; கருந்தாள் வேங்கை அம்குவட்டிடை - கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய