பக்கம் எண் :


598


அயரும் - கரிய விரலையுடைய மந்தியை வருவிருந்தாக ஏற்றுக்கொண்டு கொடுத்து ஓம்பாநிற்கும்; வான் தோய் வெற்ப - விசும்பில் நீண்ட மலைநாடனே!; எம் காமம் கனிவது ஆயினும் - எம்பால் நீ காமம் மிகுதியாகக் கொண்டிருப்பினும்; யாமத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை வெஞ்சின உருமின் உரறும் - இரவு நடுயாமத்துக் கரிய புலியைக் கொன்ற பெரிய கையையுடைய யானை கொடிய சினத்தையுடைய இடிபோல முழங்கா நிற்கும்; அஞ்சு வரு சிறு நெறி வருதலான் - யாவரும் அஞ்சுகின்ற சிறிய கொடிய வழியின் வருதலானே; சான்றோய் அல்லை - நீ சால்புடையையல்லை; ஆதலின் இங்ஙனம் நீ வருதலை நீக்கி வேறு தக்கதொன்றனைச் செய்வாயாக! எ - று.

     (வி - ம்.) ஆளில் பெண்டிர் - பொருள் தேடிவந்து பாதுகாக்குங் கணவனை இழந்த கைம்மை மகளிர். பனுவல் - பறித்த பஞ்சு. "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன' என்றார் (125) புறத்தினும், முடமுதிர்பலா - இளமகள் கீழ்நின்றபடியே பறித்தற்குரியது.

     உள்ளுறை :-குறவர் மடமகள் பலவின் பழத்துச் சுளையை மந்தியை விருந்தாகக் கொண்டு ஓம்புமென்றது, நீ மணஞ் செய்துகொள்ள வரின் எஞ்சுற்றத்தார் நின்னை மணமகனாக ஏற்று மகட்கொடை நேர்வரென்றதாம்.

    பசித்துவந்த மந்தியையும் ஓம்பு மலையுடையையா யிருந்தும் நின்னை அடைக்கலம்புக்க இவள் அஞ்சாவாறு வரைந்தா யல்லையே யென்றிரங்கியதென்பது.

    இத்தகைய கொடிய நெஞ்சினையாகிய மலையின் கண்ணே மஞ்சும் தவழாநின்றதே! இஃதென்ன வியப்போ எனப் பொருளின் புறத்தே இறைச்சி தோன்றுவதும் அறிக. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) தாளில் - தமது முயற்சியாலே. வருவிருந்து: வினைத்தொகை. எம் காமம் - எம்முடைய காமம் எனினுமாம்.

(353)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, தோழியாற் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

     (து - ம்.) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகனை நெருங்கிய தோழி, 'ஐயனே ! நினது கேண்மை அலராய் விளைகின்ற'தென்று கூறி, இறைச்சியாலே தலைமகளை இவ்வயிற் செறித்தமை சொல்லி, அஃது எவ்வாறு யாங்கள் பொறுப்பதென வரைவுகடாவா நிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "காப்பின் கடுமை . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.