பக்கம் எண் :


605


சாரல் நாடனுடனே; ஆடிய நாள் - அருவியில் ஆடிய நாளினை நினைந்து; என்றும் நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாது - எக்காலத்தும் நெஞ்சைப் புண்படுத்திக் கொண்டு கெட்டொழிய அறியாததாயிராநின்றது; நின் குறிப்பு எவன் - அது காரணமாக நின் கருத்துத்தான் எவ்வாறுளதோ? அதனைக் கூறிக்காண் எ - று.

     (வி - ம்.) வடுப்படுத்தல் - குற்றப்படுத்தலுமாம். உலறிய மஞ்ஞையென்க. உலறுதல் - சிலும்புதல். குறிப்பு - கருத்து.

     வடுப்படுத்தல் கெடுதியையுடைய தெனவும் தன் அறிவு அத்தன்மையது அன்றெனவும் அறிவுறுத்துவாள் கெட அறியாதே யென்றாள். அங்ஙனம் யான் துன்புறாதிருப்பதை அறிந்தனை யாதலிற் 'கேள்வன் பிரிந்ததனால் வருந்தாது மகிழ்ந்துறைகின்ற இவளொருத்தியின் நெஞ்சம் வன்மை உடையது' எனக் கருதுகின்றனையோ வென்னுங் குறிப்பால் நின் குறிப்பு எவனோ வென்றாள்.

     இறைச்சி :- மழை பெய்தலானே நனைந்த மயில் சோலையில் உலாவி வருமென்றது, அவன் முன்பு ஒரு காலத்தே கூடித் தலையளி செய்தலால் மகிழ்ந்த எனது நெஞ்சம் இப்பொழுதும் சோர்வடையாமல் அவன் தோள்மீது இயங்காநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தோழியொடு கூறி ஆறியிருத்தல்.

     (பெரு - ரை.) நெஞ்சு வடுப்படுத்துமாயினும் ஆடியநாள் கெட அறியாது ஒரோவழி என்னை இன்புறுத்துவதும் ஆகின்றது; ஆதலால் ஆற்றுவல் காண்! என்பது குறிப்பு.

(357)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்துத் தோழி இவள் ஆற்றாளாயினள்;் இவளை இழந்தேனெனக் கவன்றாள் வற்புறுத்தது.

     (து - ம்.) என்பது, அறத்தொடு நிற்றலின்பின் மணஞ் செய்து கொள்ளாது தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்துத் தோழி இவள் ஆற்றாளாயினாள்; இவளை இழந்தேனெனக் கவலையுடையளாய் இறைமகளை நெருங்கி நமது கவின் கெடுமாறு பிரிந்துபோகிய தலைவர் முன்பு நின்னை அகன்று போகேன் என்று சூளுரைகூறி அதனை மறந்தனராதலால் 'அது காரணமாக நீ அணங்காதொழி' என்று கடல் தெய்வத்துக்குப் பரவுக்கடன் கொடுப்போம் வாவென அவள் ஆற்றும் வண்ணம் சூழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, 'ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட' (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

     துறை : (2) அக்காலத்து ஆற்றாளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.