பக்கம் எண் :


641


     (சொ - ள்.) பாண கலிங்கமும் நெய்யும் குய்யும் ஆடி மையொடு மாசு பட்டன்று - பாணனே! எம்முடைய ஆடைதானும் நெய்யும் நறும்புகையும் அளாவிப் புதல்வதற்குத் தீட்டும் மையும் இழுகி அழுக்குப் படிந்திரா நின்றுது; திதலை மெல்முலைத்தீம்பால் பிலிற்றப் புதல்வன் புல்லி தோளும் புனிறு நாறும்மே - சுணங்கு அணிந்த மெல்லிய கொங்கையின் இனியபால் பெருகுதலாலே அந்தப் பால் சுரப்பப் புதல்வனைப் புல்லிக் கொண்டு எம் தோளும் ஈன்ற அணிமையானாகிய முடைநாற்றம் வீசாநிற்கும்; வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் - இங்ஙனம் ஆகையில் தூய இழையணிந்த பரத்தையர் சேரிக்கண்ணே தோன்றுகின்ற தேரையுடைய காதலன் கூடுதற்குரிய தகுதிப்பாடுடையேமல்லேம்; அதனால் நின் தண் துறை ஊரனைக் கொண்டு செல் - ஆதலின் நின் தண்ணிய துறையையுடைய அவ்வூரனை இப்பொழுதே கொண்டு சென்று பரத்தையர் பால் விலைகொண்டு ஈடாக உய்ப்பாயாக!; பொன் புனை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழா அல் வல்லை ஆயினும் - பொன்போன்ற நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழையெடுத்துப் பாடுதலில் நீ வல்லனே யாயினும்; தொழாஅல் - ஈண்டு எம்மைத் தொழுது படாதேகொள்; பாடு மனைப்பாடல் கூடாது நீடு நிலைப்புரவியும் பூண் நிலை முனிகுவ - சிறந்த எமது மனையின்கண்ணே நீ நின்று பாடுதலைச் செய்யாதபடி நெடும் பொழுது நிற்றலையுடைய தேரிலே பூட்டிய குதிரைகளும் தம்மைப் பிணித்திருத்தலை வெறுக்கின்றன கண்டாய்; யாம் வேட்டது இல் வழியே விரகு இல மொழியல் - யாம் விரும்பியது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற்களை எம்பால் மொழிய வேண்டா! எ - று.

     (வி - ம்.) நெய் - வாலாமை நீங்க ஆடும் நெய். குய் - அவ் வாலாமை முதலாய முடைநாற்றம் நீங்க இடும் நறும்புகை. எழால் - யாழ்நரம்பினோசை.

     பரத்தைமகளிர் தூயராதலின் அங்குச் செல்க வென்பாள், வாலிழை மகளிரென்றாள். அதன் முன் தம் இழிந்த நிலைமை கூறுவாள், புனிறு நாறுமென்றாள். சேரித் தோன்றும் தேரென்றது, தம்மனைக்கண்ணே நிறுத்தாது பரத்தையர் சேரியிலேயே நாளுங்கொண்டு சென்ற அவன் கொடுமை குறித்தவாறு. எழால் வல்லை யென்றது, அதனால் எம்மை வசிக்க இயலாதென்றவாறு. நீடு நிலைப் புரவியென்றது. ஊரன் நெடும் பொழுது அயலில் வந்திருப்பதனை யாம் அறிந்துளேமென்றவாறு. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

     (பெரு - ரை.) நின் துறைவன் மாசற்ற அகவழகாகிய அன்பினது மாண்புணரான்காண், அவன் வறிய புறவழகையே காமுறுவோன் ஆதலின் அப்புறவழகு இப்பொழுது எம்பால் இல்லை என்பாள், எம் கலிங்கம் மாசுடைத்து எந்தோளும் புனிறு நாறும் யாம் ஒத்தனெம் அல்லேம் என்றவாறு. 'மெய்யொடு மாசுபட்டன்றே' என்றும் பாடம்.

(380)