(து - ம்,) என்பது, தலைமகன் வினைவயிற் பிரிந்தவழி ஆற்றாத தலைமகள், அவன் குறித்த பருவம் வருதலும் கண்டு, 'அவர் கூறிய கார் காலம் வந்து நிலைத்திரா நின்றது; இன்னும் இறந்துபடுதலின்றி யானும் உயிரோடிரா நின்றேன்; நடுங்குவது தீராத உள்ளத்துடனே இத் துன்பத்தை எவ்வாறு தாங்குவேன்' என அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்பதனாற் கொள்க.
| அருந்துயர் உழத்தலின் உண்மை சான்மெனப் |
| பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் |
| கரைபொருது இழிதரும் கான்யாற்று இகுகரை |
| வேர்கிளர் மரஅத்து அந்தளிர் போல |
5 | நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை |
| யாங்கனந் தாங்குவென் மற்றே ஓங்குசெலல் |
| கடும்பகட்டு யானை நெடுமான் அஞ்சி |
| ஈர நெஞ்சம் ஓடிச்சேண் விளங்கத் |
| தேர்வீசு இருக்கை போல |
10 | மாரி இரீஇ மான்றன்றால் மழையே. |
(சொ - ள்.) ஓங்கு செலல் கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி ஈரநெஞ்சம் ஓடிச் சேண் விளங்கத் தேர் வீசு இருக்கை போல - தலையெடுத்து நடக்கும் உயர்ந்த விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையும் விரைந்து செல்லும் குதிரைப் படையுமுடைய அஞ்சியென்பான் குளிர்ந்த உள்ளத்தால் ஆராய்ந்து நீண்டகாலம் தன்பெயர் விளங்கி நிற்குமாறு இரவலர்க்குத் தேர்களைப் பரிசு கொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல; மாரி இரீஇ மழைமான்றன்று - மேகம் மழை பெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது; அருந்துயர் உழத்தலின் சான்ம் உண்மை - என் காதலர் வருவேமென்ற இப்பருவத்தில் அவர் வாராமையாலே தாங்குதற்கரிய துன்பத்தை நுகர்தலின் அறிகுறியாக இதுகாறும் யான் இறந்தொழியின் அவர்பால் அன்புடையேன் என்பது உண்மையாகும்; இன்மையின் இலேனும் அல்லேன் - அவ்வாறு இறந்தொழியாமையின் அன்பிலேன் அல்லேனோ?; கரை பொருது இழிதரும் கான்யாற்று