பக்கம் எண் :


652


     (து - ம்,) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கு மொக்கும்).

     (இ - ம்.) இதுவுமது.

    
அம்ம வாழி தோழி நன்னுதற்கு 
    
யாங்கா கின்றுகொல் பசப்பே நோன்புரிக் 
    
கயிறுகடை யாத்த கடுநடை எறிஉளித் 
    
திண்திமில் பரதவர் ஒண்சுடர்க் கொளீஇ 
5
நடுநாள் வேட்டம் போகி வைகறைக் 
    
கடல்மீன் தந்து கானல் குவைஇ 
    
ஓங்கிரும் புன்னை வரி நிழல் இருந்து 
    
தேங்கமழ் தேறல் கிளையொடு மாந்திப் 
    
பெரிய மகிழுந் துறைவன்எம் 
10
சிறிய நெஞ்சத்து அகல்வுஅறி யானே.  

     (சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழி வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; நோன் புரிக் கயிறு கடையாத்த எறி உளிக் கடு நடைத் திண் திமில் பரதவர் - வன்மைமிக்க புரிகளான் முறுக்குண்ட கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற ஈட்டியையுடைய நீரில் விரைந்து செல்ல வல்ல திண்ணிய மீன்படகிலே செல்லுகின்ற பரதவர்; ஒள் சுடர்க் கொளீஇ நடுநாள் வேட்டம் போகி - ஒள்ளிய விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு நடுயாமத்து வேட்டைமேற்சென்று; கடல் மீன் வைகறைத் தந்து - கடலிலே பிடித்த மீன்களை விடியற்காலையில் கொண்டுவந்து; கானல் குவைஇ - கழிக்கரைச் சோலையின்கண்ணே குவித்து; ஓங்கு இரும் புன்னை வரிநிழல் இருந்து - உயர்ந்து கரிய புன்னை மரங்களின் வரியமைந்த நிழலிலிருந்து; தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி - தேன் மணம் வீசும் தெளிந்த கள்ளை அருகிலே தம் உறவினருடன் கூடிப்பருகி; பெரிய மகிழும் துறைவன் - அளவில்லாது மிகவும் மகிழ்ந்து வைகும் கடலின் துறையையுடைய தலைமகன்; என் சிறியநெஞ்சத்து அகல்வு அறியான் - எமது சிறிய உள்ளத்தினின்று நீங்குதல் கற்றறிந்திலனாதலின் எப்பொழுதும் எம்முள்ளத்தூடே இராநின்றனன்; நல் நுதற்குப் பசப்பு யாங்கு ஆகின்று - அங்ஙனம் அவன் எம்மைப் பிரியாது உறைதலானே எமது நல்ல நுதலின் கண்ணே பசலை எவ்வாறு உண்டாகாநிற்கும்; அதனை ஆராய்ந்து கூறிக் காண்! எ - று.

     (வி - ம்.) கடுநடைத் திமிலென்க. உளி: எஃகினாலாகிய ஈட்டிக்கு ஆகுபெயர்.