பக்கம் எண் :


76


    திணை : பாலை.

    துறை : இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி, தலைவனைச் செலவழுங்குவித்தது.

    (து - ம்.) என்பது, தலைவன் தான் வினைவயிற் பிரிதலை அறிவிப்பக்கேட்ட தோழி, நீயிர் பிரிந்து சுரம்போகுதல் நுமக்கு உவகையுடைத்தாயிராநின்றது, அங்ஙனம் பிரிதலைக் கேட்டவுடன் இவட்குப் பெரியதோ ரழிவு வாராநின்றது, ஆதலின், ஏற்றது செய்ம்மினெனச் செலவழுங்கக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல்-கற்- 9) என்னும் விதி கொள்க.

    
துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் 
    
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் 
    
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி  
    
ஆர்ந்தன வொழிந்த மிச்சில் சேய்நாட்டு 
5
அருஞ்சுரஞ் செல்வோர்க்கு வல்சி யாகும் 
    
வெம்மை யாரிடை இறத்தல் நுமக்கே 
    
மெய்ம்மலி யுவகை யாகின்று இவட்கே 
    
அஞ்ச லென்ற இறைகை விட்டெனப்  
    
பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்தலின் 
10
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் 
    
ஓரெயில் மன்னன் போல 
    
அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே. 

    (சொ - ள்.) துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் - வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் விளங்கிய வெப்பத்தையுடைய கோடை நீடிய மலைப்பக்கத்தில்; ஓய் பசிச் செந்நாய் உயங்கு மரை தொலைச்சி - நுணுகிய பசியையுடைய செந்நாய் வாடிய மரையாவைக் கொன்று போகட்டு; ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் - தின்றொழிந்த மிச்சில்; சேய் நாட்டு அருஞ் சுரஞ் செல்வோர்க்கு வல்சியாகும் - நெடுந்தூரத்திலுள்ள வேற்று நாட்டினின்று செல்லுதற்கரிய பாலைநிலத்தின்கண்ணே செல்லுகின்ற மாந்தர் உண்ணும் உணவாயிருக்கும்; வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கு மெய்ம்மலி உவகை ஆகின்று - வெப்பமுற்ற அரிய வழியிலே செல்லுதல் நுமக்கு உடம்பு நிறைவுற்ற மகிழ்ச்சியுடைத் தாயிராநின்றது; இவட்கு ஒழிதல் கேட்டு அஞ்சல் என்ற இறைகைவிட்டென - இவட்கோவென்றால்