(து - ம்.) என்பது, தலைவன் தான் வினைவயிற் பிரிதலை அறிவிப்பக்கேட்ட தோழி, நீயிர் பிரிந்து சுரம்போகுதல் நுமக்கு உவகையுடைத்தாயிராநின்றது, அங்ஙனம் பிரிதலைக் கேட்டவுடன் இவட்குப் பெரியதோ ரழிவு வாராநின்றது, ஆதலின், ஏற்றது செய்ம்மினெனச் செலவழுங்கக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல்-கற்- 9) என்னும் விதி கொள்க.
| துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் |
| என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் |
| ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
| ஆர்ந்தன வொழிந்த மிச்சில் சேய்நாட்டு |
5 | அருஞ்சுரஞ் செல்வோர்க்கு வல்சி யாகும் |
| வெம்மை யாரிடை இறத்தல் நுமக்கே |
| மெய்ம்மலி யுவகை யாகின்று இவட்கே |
| அஞ்ச லென்ற இறைகை விட்டெனப் |
| பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்தலின் |
10 | களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் |
| ஓரெயில் மன்னன் போல |
| அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே. |
(சொ - ள்.) துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் - வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் விளங்கிய வெப்பத்தையுடைய கோடை நீடிய மலைப்பக்கத்தில்; ஓய் பசிச் செந்நாய் உயங்கு மரை தொலைச்சி - நுணுகிய பசியையுடைய செந்நாய் வாடிய மரையாவைக் கொன்று போகட்டு; ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் - தின்றொழிந்த மிச்சில்; சேய் நாட்டு அருஞ் சுரஞ் செல்வோர்க்கு வல்சியாகும் - நெடுந்தூரத்திலுள்ள வேற்று நாட்டினின்று செல்லுதற்கரிய பாலைநிலத்தின்கண்ணே செல்லுகின்ற மாந்தர் உண்ணும் உணவாயிருக்கும்; வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கு மெய்ம்மலி உவகை ஆகின்று - வெப்பமுற்ற அரிய வழியிலே செல்லுதல் நுமக்கு உடம்பு நிறைவுற்ற மகிழ்ச்சியுடைத் தாயிராநின்றது; இவட்கு ஒழிதல் கேட்டு அஞ்சல் என்ற இறைகைவிட்டென - இவட்கோவென்றால்