பக்கம் எண் :


78


    
பொருவில் ஆயமோ டருவி யாடி 
    
நீரலைச் சிவந்த பேரமர் மழைக்கண் 
    
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி 
    
மனைவயிற் பெயர்ந்த காலை நினை இய
5
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த 
    
நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக் 
    
கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல 
    
பல்கிளைக் குறவர் அல்கயர் முன்றில் 
    
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய 
10
பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச்  
    
செல்மழை யியக்கங் காணும் 
    
நன்மலை நாடன் காதன் மகளே. 

    (சொ - ள்.) நெஞ்சே நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் கொழுங் குரல் கோடல் கண்ணி - நெஞ்சே ! கொல்லையிலுள்ள நீண்ட இலையையுடைய முற்றிய கதிரைத் தாங்கமாட்டாமே சாய்ந்த தினையின் வளைந்த தாள் நிமிர்ந்துநிற்குமாறு அவற்றின் கொழுவிய கதிர்களைக் கொய்துகொண்டு போதலைக் கருதி; செழும்பல் பல்கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில் - செழுவிய மிக்க பல கூட்டமுடைய குறவர்கள் சிறார் கூடித் தங்கி விளையாட்டு அயர்கின்ற முன்றிலின்கண் இருந்து; குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச் செல்மழை இயக்கம் காணும் - குடம் போன்ற காயையுடைய ஆசினிப் பலாவையுடைய தோட்டத்தில் நீண்ட பலவாய மரங்களினுயர்ந்த கிளைகளிலுள்ள மின்மினியை விளக்கமாகக் கொண்டு விசும்பு செல்லுகின்ற மழை முகிலினியக்கத்தை அறியாநிற்கும்; நல் மலை நாடன் காதல் மகள் பொரு இல் ஆயமோடு அருவி ஆடி - நல்ல மலைநாடன் அன்புள்ள புதல்வி, ஒப்பில்லாத தோழியர் கூட்டத்துடன் அருவியினீராடி; நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக்கண் குறியா நோக்கமொடு முறுவல் நல்கி - அங்கு நீரான் அலைக்கப்படுதலாலே சிவந்த பெரிய அமர்த்த குளிர்ச்சி்யையுடைய கண்களின் குறிக்கப்படாத பார்வையையும், புன்னகையையும் நமக்குத் தந்து; மனைவயின் பெயர்ந்த காலை - தனது மனையிடத்துச் சென்றுவிட்ட பிற்பாடு; நினைஇய நினக்கோ அறியுநள் - கருதிவந்த நின்னாலோ அவள் அறியத் தக்காள் ! முன்னரேயன்றோ கைப்பற்றிக் கொண்டிருக்க வேண்டும் ! எ - று.

    (வி - ம்.)கால் - தாள். குரல் - கதிர். இயக்கம் - சஞ்சாரம். நினக்கு : உருபு மயக்கம். இதனால் ஆண்டுப்போந் தின்பந்துய்த்தாயில்லை;