பக்கம் எண் :


79


பின்னர்வந்து புலம்புதி யென்றவாறு குறவர் தினைகொய்தலைக் கருதி யுறையு முன்றிலென்னுங் குறிப்பால் தினைகொய்யப்பட்டதும் தலைவி பின்னர்ச் சுனையாடி மனைவயிற்புக்கதுங் கூறியவாற்றால் இற்செறிப்புண்ட பின்னர்த் தலைவன் கூற்று நிகழ்ந்ததெனக் கூறினால் மனைவயிற்புக்கபின் இரவுக்குறி வேண்டற்பாற்றேயன்றி யிதுநிகழாதெனவும், அலரானும் பிறவற்றானுமறிந்துழிச் செவிலி இற்செறிக்குமெனவும,் அவ்வயின் இக்கூற்று நிகழ்ந்ததெனவுங் கூறிவிடுக்க.

    துய்க்குந்தோறும் புதுமை பயத்தலின் முன்பு நுகர்ந்தன கனவே போலுமெனக் கருதித் தான் துய்த்திலனேபோலக் கூறினான்; நோக்கும் முறுவலுமட்டுமே நல்கினா ளென்றமையின்.

    உள்ளுறை :-குறவர் மின்மினியை விளக்காகக் கொண்டு மழையியக்கத்தை நோக்கி்யிருத்தல்போல நீயும் தோழி கூற்றால் தலைவியினியக்கத்தைக் காண முயலுகின்றனைபோலு மென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய அவலம்பற்றிய இளிவரல். பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) இனி, இச்செய்யுளின்கண் குறவர் முன்றிலின்கண் நின்று இரவின்கண் வானிலே இயங்கும் முகிலின் இயக்கத்தைக்கண்டு நாளை மழைபெய்யும் அல்லது பெய்யாது என்று அறியும் நுண்ணறிவு உடையோர் ஆகலின் அங்ஙனமே நம்முடைய களவொழுக்கத்தினையும் இவர் மறைவிருந்து ஒற்றியுணர்ந்து தலைவியை இற்செறித்தனர் போலும் என்று பரிவுற்று மெலிந்தான் என இறைச்சிப் பொருளாகக் கோடல் சிறப்புடையதாம் என்க. இக் கருத்து இதன் பொருட்புறத்தே தோன்றுதலின் இஃதிறைச்சியேயாம்.

(44)
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, குறைவேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது.

    (து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தன்குறை கூறிச்சென்றிரந்த தலைவனைத் தோழி நோக்கி நீ உயர்குலத்தரசன் மகனாதலின் தாழ்ந்த பரதவர் குலத்தாளை மணக்கற்பாலையல்லை, எமக்கு நலன் என்ன வேண்டிக் கிடந்தது? நாற்றத்தேமாகலின் அகன்று நில்; எம் வாழ்க்கை நும்மோடொத்த தன்றெனக் குலமுறை கூறி மறுத்துச் சேட்படுத்தா நிற்பது.

    சேட்படுத்தலென்பது - தோழியானவள் தலைமகளது பெருமையும் தனது முயற்சியினருமையும் தோன்றுதல் காரணமாகவும்; இவ்வளவருமையுடையாள் இனி நமக்கு எய்துதற் கருமையுடையாளென இக்களவுப் புணர்ச்சி நீட்டியாது விரைய வரைந்துகோடல் காரணமாகவும் தலைமகனுக்கியைவதை மறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "பெருமையிற் பெயர்ப்பினும்" (தொல்-கள- 23) என்னும் விதிகொள்க.