(து - ம்.) என்பது, பாங்கியிற் கூட்டத்துத் தன்குறை கூறிச்சென்றிரந்த தலைவனைத் தோழி நோக்கி நீ உயர்குலத்தரசன் மகனாதலின் தாழ்ந்த பரதவர் குலத்தாளை மணக்கற்பாலையல்லை, எமக்கு நலன் என்ன வேண்டிக் கிடந்தது? நாற்றத்தேமாகலின் அகன்று நில்; எம் வாழ்க்கை நும்மோடொத்த தன்றெனக் குலமுறை கூறி மறுத்துச் சேட்படுத்தா நிற்பது.
சேட்படுத்தலென்பது - தோழியானவள் தலைமகளது பெருமையும் தனது முயற்சியினருமையும் தோன்றுதல் காரணமாகவும்; இவ்வளவருமையுடையாள் இனி நமக்கு எய்துதற் கருமையுடையாளென இக்களவுப் புணர்ச்சி நீட்டியாது விரைய வரைந்துகோடல் காரணமாகவும் தலைமகனுக்கியைவதை மறுத்துக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "பெருமையிற் பெயர்ப்பினும்" (தொல்-கள- 23) என்னும் விதிகொள்க.