பக்கம் எண் :


80


    
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி 
    
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு 
    
மீனெறி பரதவர் மகளே நீயே,  
    
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் 
5
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே 
    
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி  
    
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ 
    
புலவு நாறுதும் செலநின் றீமோ 
    
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை 
10
நும்மொடு புரைவதோ அன்றே 
    
எம்ம னோரின் செம்மலு முடைத்தே. 

    (சொ - ள்.) இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள் புக்கு மீன் எறி பரதவர் மகள் - நின்னாற் காதலிக்கப்படும் இவள்தான், கடற்கரைச் சோலையிற் பொருந்திய அழகிய சிறுகுடியின்கண்ணே இருக்கின்ற, நீலநிறத்தையுடைய பெரிய கடலுங் கலங்குமாறு அதன்மேற்சென்று வலைவீசி மீனைப் பிடிக்கின்ற பரதவர் புதல்விகண்டாய்; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந் தேர்ச்செல்வன் காதல் மகன் - நீதானும் நெடிய கொடிகள் காற்றாலசைந்து நுடங்குங் கடைத் தெருக்களையுடைய பழைய ஊரின்கணுள்ள கடிய செலவினையுடைய தேரையுடைய செல்வ மன்னன் காதலிற் பெற்றுவளர்த்த புதல்வனாயிராநின்றனை, ஆதலிற் குலத்திற்கே பொருத்தமில்லை; நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவன் ?- அங்ஙனம் மணப்பதாயினும், நிணத்தையுடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தல் வேண்டி வெயிலிற் போகட்டு அத்தசைகளைக் கூட்டமாகிய காக்கைகள் கவராதவாறு அவற்றை ஓட்டிப் பாதுகாக்கின்ற எமக்கு நின் சிறந்த நலந்தான் யாது வேண்டிக் கிடந்தது ? ஒன்றும் வேண்டா !; புலவு நாறுதும் செலநின்றீ - சுறா நிணத்தைத் தடிந்து பரப்புதலானே யாம் புலவு நாற்றம் நாறுகின்றேம்; இந்நாற்றம் நீ பொறாயாகலின், எம்மருகில் வராதேகொள் ! அகன்றுபோய் நிற்பாய்மன்; பெருநீர் விளையுள் எம்சிறு நல் வாழ்க்கை நும்மொடு புரைவது அன்று - கடனீரை விளைவயலாகக் கொள்ளுகின்ற எமது சிறிய வாழ்க்கையானது நும்மோடு ஒக்க வுயர் வுடைத்தன்று; எம்மனோரில் செம்மலும் உடைத்து - எம்போன்ற பரதவரில் நின் போன்ற செல்வமாக்களையும் எங்கள் மரபுடைத்தாயிராநின்றது; எ - று.