பக்கம் எண் :


81


     (வி - ம்.) புள் - காக்கை.

கடலைக் கலக்கும் வன்மையரென்றது எமர் மூர்க்கராதலின், நின்னைக் காணின் ஏதமிழைப்பரென அஞ்சியச்சுறுத்தியதாம். மீனெறிவார் மகள் என்றது இரக்கமின்றி மீனையெறிந்து கொல்லும் பரதவர் மகளாதலின் நீ படுந்துன்பத்துக் கிரங்காளெனக் கூறியதாம். உணக்கல் வேண்டிப் புள்ளோப்புவேமென்றது, நீ இங்ஙனம் வரினுடம்பட வொட்டாது போக்குவே மென்றதாம். இது தோழி தனது காவலொடு மாறு கொள்ளாமை கருதியென்க. புலவு நாறுதுமென்றது எம்போலப் புலவு நாற்றத்தொடு வரின் இயையுமென்றதாம்; இது, முன்பு கூறியவற்றைக் கேட்ட தலைவ னாற்றானாக, அவனாற்றுதல் வேண்டிக் கூறப்பட்டது. செலநின்றீ யென்றது குறியிடமிது தகுதியுடையதன்றென மறுத்ததாம்.

     இதனுட் 'கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே' என்றது அவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு இவர்களைச் சின்னாள் மறந்திருத்தலானே அவனை இகழ்ச்சிக் குறிப்பாற் றலைவனாகக் கூறினாளெனவுமாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - செவ்வி பெறுதல்.

     (பெரு - ரை.) நிணச்சுறா அறுத்த என்புழி அறுத்த பலவறி சொல்லாகக் கோடலுமாம். பெருநீர் என்பது அன்மொழித்தொகை. கடல் என்பது பொருள்; எனவே, கடலை விளையுளாகக் கொள்ளுகின்ற எனலே அமையும், நீர் எனல் வேண்டாவென்க. எம்மனோர் இல் எனக் கண்ணழித்துப் பரதவராகிய எம்மனோருடைய குடி செம்மலும் உடைத்து என இல்லினை எழுவாயாக்கினுமாம்.

     நிணச் சுற வுறுத்த, நிணச்சுறாவுறுத்த, என்பவும் பாடவேற்றுமைகள்.

(45)
  
     திணை : பாலை.

     துறை : இது, பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரியுந் தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி அவனை நோக்கி "ஐயனே" ! இவள்கிடந்து வருந்தாநிற்ப யாம் பொருள்வயிற்பிரிதும் என்ற நும்மைத் தெருட்டி இளமையதருமையும் அன்பினதகலமுங் காட்டற்கியலுமோ? ஆதலின், நீயிரே பேணற்பாலி ரென மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்குப் "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல்-கற்- 9) என்னும் விதிகொள்க.

    
வைகல் தோறும் இன்பமும் இளமையும் 
    
எய்கணை நிழலிற் கழியுமிவ் வுலகத்துக் 
    
காணீர் என்றலோ அரிதே அதுநனி 
    
பேணீர் ஆகுவீர் ஐயவென் தோழி  
5
பூணணி யாகம் புலம்பப் பாணர் 
    
அயிர்ப்புக்கொண் டன்ன கொன்றையந் தீங்கனி 
    
பறையறை கடிப்பின் அறையறையாத் துயல்வர 
    
வெவ்வளி வழங்கும் வேய்பயில் அழுவத்து 
    
எவ்வ மிகூஉம் அருஞ்சுரம் இறந்து 
10
நன்வாய் அல்லா வாழ்க்கை 
    
மன்னாப் பொருட்பிணிப் பிரிதும்யா மெனவே.