பக்கம் எண் :


86


     இறைச்சி :-கோங்கம்பூ மலர்ந்த காடு அழகுகொண்டவென்றது - நீயிர் தலைவிபால் முகமலர்ந்துறைதலால், இல்லறம் அழகாக நடைபெறுகின்றதென்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.

     (பெரு - ரை.) "நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே" (தொல்-அகத்- 43) என்னும் புறநடை விதிபற்றித் தோழி முன்னிகழ்ந்ததொன்றனை எடுத்துக் காட்டினள். இதனால் அக்காலத்தே யாங்கள் எம் இருமுது குரவர் முதலியோரையும் பிரிந்து நிற்பிரியமாட்டாது நின்னைத் தொடர்ந்து பெருங்காட்டினூடும் வந்தேமல்லமோ ? அத்தகைய எம்மை நீயிர் இப்பொழுது பிரியக் கருதின் யாம் உய்வதெங்ஙனம் என இப்பொருட்புறத்தே இறைச்சி தோன்றுதலும் நுண்ணிதின் உணர்க.

(48)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது.

    (து - ம்.) என்பது தலைவன் இரவில்வந்து கூடுதற்கு உடன்பட்ட தோழி, தலைமகளை 'நின் வருத்தந்தீரத் தலைவனூர்க்குப் போய் அவனிடத்து நமது துறையின் தனிமையையும் எமர் அங்குவாராது தாழ்த்ததனையும் கூறினால் குற்றமுளதாமோ' வென உள்ளுறையால் அவள் தலைவனைக் கூடுதற்கு இரவுக்குறி விரும்பும்படி கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "புணர்ச்சி வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

     துறை : (2) சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.

     (து - ம்.) என்பது, தலைவன் வந்து ஒரு சிறைப்புறத்தானாக அவன் கேட்டு விரைய வரையுமாற்றானே, தலைவியினாற்றாமைக்கு வியந்து கூறுவாள்போன்று துறை தனிமையுடைத்தென்று அவனூர்க்குச் சென்று கூறியழைத்து வருதுமோவெனக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
படுதிரை கொழீஇய பால்நிற எக்கர்த் 
    
தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே 
    
முடிவலை முகந்த முடங்கிறாப் பாவைப் 
    
படுபுள் ஓப்பலிற் பகன்மாய்ந் தன்றே 
5
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டமடிந்து 
    
எமரும் அல்கினர் ஏமார்ந் தனமெனச் 
    
சென்றுநாம் அறியின் எவனோ தோழி