| மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித் |
| தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல் |
| மணங்கமழ் நாற்றம் மரீஇ யாமிவள் |
| சுணங்கணி ஆகம் அடைய முயங்கி |
5 | வீங்குவர்க் கவவின் நீங்கல் செல்லேம் |
| நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் |
| பிரிந்துறை வாழ்க்கை புரிந்தமை யலையே |
| அன்பிலை வாழியெம் நெஞ்சே வெம்போர் |
| மழவர் பெருமகன் மாவள் ஓரி |
10 | கைவளம் இயைவ தாயினும் |
| ஐதேகு அம்ம இயைந்துசெய் பொருளே. |
(சொ - ள்.) எம் நெஞ்சே மா கொடி அதிரல் பூவொடு தூத் தகட்டுப் பாதிரி மலர் எதிர் வேய்ந்த கூந்தல் - எமது நெஞ்சமே ! கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடனே தூய பொற்றகடு போன்ற பாதிரி மலரையும் சேர எதிர் எதிர் வைத்துத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையைச் சூடிய கூந்தலின்; மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லோம் - மணங்கமழும் நாற்றத்தைப் பெற்று, யாம் அவளுடைய சுணங்கமைந்த மார்பிற் கொங்கையை ஒருசேர அணைத்துக்கொண்டு மிக்க இன்சுவையையுடைய இவள் கையால் அணைத்திருத்தலினின்றும் நீங்க மாட்டுகிலேம், நீயே ஆள்வினை சிறப்ப எண்ணிநாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலை - நீ தானும் முயற்சியை மேம்படக் கருதி நாள்தோறும் (எம்மை) இவளைப் பிரிந்து தனித்து உறைகின்ற வாழ்வினை விரும்பிச் சிறிது பொழுதும் ஓய்கின்றனையல்லை; அன்பு இலை வாழி - ஆதலின் நீ என்மாட்டு அன்பினையுடையையல்லைமன் இங்ஙனமே நெடுங்காலம் வாழ்வாயாக !; இயைந்து செய்பொருள் - நீ உட்கொண்டு உடன்பட்டு ஈட்டும் பொருள்தான்; வெம்போர் மழவர் பெருமகன் மாவள் ஓரி கைவளம் இயைவதாயினும் - வெய்ய போர் செய்ய வல்ல போர்வீரர் தலைவனாகிய சிறந்த கொடையையுடைய ஓரி யென்பவனது கைவண்மைக்குப் பொருந்திய செல்வமே நீ ஈட்டும் பொருளாக நினக்குக் கிடைக்கப் பெறினும் அப்பொருள் இவளது முயக்கத்தினும்காட்டிற் சிறந்ததன்று கண்டாய் !; ஐது ஏகு - அது மிக மென்மையுடையதன்றோ அதனால் வேண்டுமெனில் நீயே ஏகுவாய் யாம் வாரகில்லேம்; எ - று.
(வி - ம்.) கவவு - அகத்திடுவது. உவர் - இனிய சுவை. அம்ம : வியப்பு. ஐது - மெல்லிது; நுண்ணிதுமாம். ஆள்வினை - முயற்சி.