Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
201-210

201. குறிஞ்சி
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!

கடிநகர் புக்கு, ''வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

202. மருதம்
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே!

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார்

203. மருதம்
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்;
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நெடும்பல்லியத்தன்

204. குறிஞ்சி
''காமம் காமம்'' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே!

தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன்

205. நெய்தல்
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன்

206. குறிஞ்சி
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்:
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஐயூர் முடவன்

207. பாலை
''செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்'' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.

செலவுக் குறிப்பு அறிந்து. ''அவர் செல்வார்'' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன்.

208. குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே,

வரை விடை, ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

209. பாலை
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.

பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

210. முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

பிரிந்து வந்த தலைமகன், ''நன்கு ஆற்றுவித்தாய்!'' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார்.