Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
301-310

301. குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.

வரைவிடை வைப்ப, ''ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன்

302. குறிஞ்சி
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே?
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
''பிரியா நண்பினர் இருவரும்'' என்னும்
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.

வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார்

303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன்

304. நெய்தல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன்

305. மருதம்
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை-யான் உற்ற நோயே.

காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார்.

306. நெய்தல்
''மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்'' எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?

காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

307. பாலை
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டில்யன்

308. குறிஞ்சி
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்
மா மலைநாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன்

309. மருதம்
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
''கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்'' என்னாது''
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!-
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.

பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன்

310. நெய்தல்
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின;
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும்,
நம்மே போலும் மம்மர்த்து ஆகி,
எல்லை கழியப் புல்லென்றன்றே;
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே.

வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன்