Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
371-380

371. குறிஞ்சி
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு,
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.

வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன்

372. குறிஞ்சி
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார்

373. குறிஞ்சி
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன்

374. குறிஞ்சி
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.

அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார்

375. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்.
யாமம் காவலர் அவியாமாறே.

இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது.

376. நெய்தல்
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,
வேனிலானே தண்ணியள்; பனியே,
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- படுமரத்து மோசி கொற்றன்

377. குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.- மோசி கொற்றன்

378. பாலை
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே!

மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார்

379. பாலை
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன்,
''அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ'' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?

நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது.

380. பாலை
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி,
பெயல் ஆனாதே, வானம்; காதலர்
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே;
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய
வண்ணத் துய்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!

பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், ''கதுமென ஆற்றுவிப்பது அரிது'' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது. - கருவூர்க் கதப்பிள்ளை.