காவன்முல்லைப் பூதனார். (பி-ம்.) 2. ‘றன்சிதர் மறைப்பத்’ 5. ‘பலவாகவ்வே’, ‘பலவாகுகவே’, ‘பலவாகுபவே’.
(ப-ரை.) தோழி, அம்ம - ஒன்று கூறுவன்; கேட்பாயாக; காதலர் - நம் தலைவர், நூல் அறு முத்தின் - நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல, தண் சிதர் உறைப்ப - குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, தாளி தண்பவர் - குளிர்ந்த தாளியறுகின் கொடியை, நாள் ஆ மேயும் - விடியற்காலத்தில் பசுக்கள் மேயும், பனி படு நாளே - பனி வீழ்கின்ற காலத்திலே, பிரிந்தனர் - என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; பிரியும் நாளும் - அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும், பல ஆகுவ - பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!
(முடிபு) தோழி, காதலர் பனிபடு நாளே பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுவ.
(கருத்து) தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் மீண்டாரிலர்.
(வி-ரை.) வாழி: அசை. பனித்துளி ஒன்றோடொன்று தொடர்பின்றித் தனித்தனியே வீழுமாதலின் நூலறுமுத்தை உவமை கூறினாள். தாளி - ஒருவகை யறுகு; “தாளி யறுகின்றாராய் போற்றி” (திருவா. போற்றி. 201); ஒருவகைக் கொடியுமாம். நாட்காலையில் பசு மேயும்பொழுது அறுகின் நுனியிலுள்ள பனித்துளிகள் துளிக்கும். பனிபடுநாளே பிரிந்தனரென்பது பிரிதற்குரிய காலமன்றென்னுங் கருத்தினது.