பக்கம் எண் :


209


(தலைவன் நெடுங்காலம் பிரிந்துறைந்தானாக அப்பிரிவை ஆற்றாத தலைவி, “ பின்பனிப் பருவத்திற் பிரிந்த தலைவர் பலநாள் செல்லவும் மீண்டு வந்திலர்; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!” என்று கூறியது.)
 104.   
அம்ம வாழி தோழி காதலர 
    
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்  
    
தாளித் தண்பவர் நாளா மேயும் 
    
பனிபடு நாளே பிரிந்தனர் 
5
பிரியு நாளும் பலவா குவவே. 

என்பது (1) பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது.

     (2) சிறிய வுள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ வென்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉமாம்.

     (சிறிய நன்மைகளை நினைந்து பெரியனவாகிய கொடுமைகளை மறக்க வேண்டாவோ; “கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த, ஒன்றுநன் றுள்ளக் கெடும்” (குறள், 109.)

காவன்முல்லைப் பூதனார்.

     (பி-ம்.) 2. ‘றன்சிதர் மறைப்பத்’ 5. ‘பலவாகவ்வே’, ‘பலவாகுகவே’, ‘பலவாகுபவே’.

     (ப-ரை.) தோழி, அம்ம - ஒன்று கூறுவன்; கேட்பாயாக; காதலர் - நம் தலைவர், நூல் அறு முத்தின் - நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல, தண் சிதர் உறைப்ப - குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, தாளி தண்பவர் - குளிர்ந்த தாளியறுகின் கொடியை, நாள் ஆ மேயும் - விடியற்காலத்தில் பசுக்கள் மேயும், பனி படு நாளே - பனி வீழ்கின்ற காலத்திலே, பிரிந்தனர் - என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; பிரியும் நாளும் - அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும், பல ஆகுவ - பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!

     (முடிபு) தோழி, காதலர் பனிபடு நாளே பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுவ.

     (கருத்து) தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் மீண்டாரிலர்.

     (வி-ரை.) வாழி: அசை. பனித்துளி ஒன்றோடொன்று தொடர்பின்றித் தனித்தனியே வீழுமாதலின் நூலறுமுத்தை உவமை கூறினாள். தாளி - ஒருவகை யறுகு; “தாளி யறுகின்றாராய் போற்றி” (திருவா. போற்றி. 201); ஒருவகைக் கொடியுமாம். நாட்காலையில் பசு மேயும்பொழுது அறுகின் நுனியிலுள்ள பனித்துளிகள் துளிக்கும். பனிபடுநாளே பிரிந்தனரென்பது பிரிதற்குரிய காலமன்றென்னுங் கருத்தினது.